இந்திய பல்கலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரு முறை மாணவர்களை சேர்த்துக் கொள்ள பல்கலை மானியக் குழு(யுஜிசி) அனுமதி வழங்கி உள்ளது. உலகளவில் பின்பற்றப்படும் நடைமுறையை இந்தியாவிலும் பின்பற்ற முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நம்நாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பல்கலைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் தாமதம் ஆவது, உடல்நிலை பிரச்சனை உள்ளிட்ட தனிப்பட்ட காரணங்களால் பல்கலையில் சேர தவறவிடும் மாணவர்கள் மீண்டும் சேர ஓராண்டு காலம் வீணாவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதீஸ் குமார் கூறியதாவது:
உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை ஆண்டுக்கு இரு முறை நடத்தி கொள்ளலாம். இது அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். ஜன., பிப்., மற்றும் ஜூலை ஆக., மாதங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதனால், தேர்வு முடிவு, உடல்நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களினால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் காத்திருக்கும் காலமும், நேரமும் குறையும்.
பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இனிமேல் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் இரண்டு முறை கேம்பஸ் இண்டர்வியூ நடத்திக் கொள்ளலாம். ஆண்டுக்கு இருமுறை எனப்படும் மாணவர் சேர்க்கை உலகெங்கிலும் உள்ள பல்கலைகளில் ஏற்கனவே அமலில் உள்ளன. நாமும் அதை பின்பற்றுவதன் வாயிலாக சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாணவர் பறிமாற்றத்தை மேம்படுத்த முடியும். நம் உலகளாவிய போட்டித் தன்மை மேம்படுவதுடன் சர்வதேச கல்வித்தரத்துடன் நாம் இணைய முடியும்.
ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை என்பது கட்டாயமில்லை. மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், அதற்கு உண்டான உள்கட்டமைப்பு மற்றும் போதிய பேராசிரியர்கள் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாத்தியப்படுத்துவதற்கான நடைமுறை
மத்திய அரசின் பல்கலை மானியக்குழுவின், ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை என்ற திட்டம் வரவேற்கப்பட கூடியது. வெளிநாடுகளில் ஆண்டுக்கு இருமுறை மாணவர் சேர்க்கை திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் அங்கேயும், வழக்கமான கல்வியாண்டில் 90 சதவீத மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேர்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரை இந்த திட்டத்தை ஒரே நேரத்தில் எல்லா நிலைகளிலும் அமல்படுத்த வேண்டாம். பிஎச்.டிக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை நடத்தலாம்; அது குறிப்பிட்ட கால அளவில் முடிக்கும் படிப்பு என்பதால் சேர்க்கை காலம் பிரச்சனை இல்லை.
முதுகலை படிப்பில் கடைசி செமஸ்டர் காலத்தில், மாணவர்கள் செயல்முறை திட்டங்களில் கவனம் செலுத்துவதால் அந்த காலகட்டத்தில் புதிய மாணவர்களை சேர்த்து பாடம் நடத்த பேராசிரியர்களுக்கு தேவையான கால அவகாசம் கிடைக்கும். எனவே முதுநிலை படிப்புக்கு ஆண்டுக்கு இருமுறை சேர்க்கையை சில பல்கலைகளில் சோதனை முறையில் அமல்படுத்த வேண்டும். இதில் எந்தவிதமான பிரச்சனைகள், சவால்கள் உள்ளன என்பதை தெரிந்து அதை சரி செய்த பின் இளநிலை படிப்புக்கு இருமுறை சேர்க்கை திட்டம் அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கலாம்.
ஏனென்றால் இளநிலை படிப்பில் அதிக மாணவர்கள் சேர்வர்; ஆண்டின் இரண்டாம் முறையில் சேரும் மாணவர்களுக்கு தேவையான பேராசிரியர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும். வகுப்பறைகள், ஆய்வகங்கள் என கூடுதல் வசதிகளும் தேவை. இதையெல்லம் கருத்தில் கொண்டு இருமுறை சேர்க்கை திட்டத்தை தகுந்த ஆய்வுகள் அடிப்படையில் நடைமுறைபடுத்தினால் மாணவர்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.