நாட்டில் தொழில்நுட்ப படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களுக்கு உரிய அங்கீகாரத்தையும், ஆலோசனைகளையும் வழங்கும் பொறுப்பைக் கொண்டுள்ளது, புதுடில்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் ஏ.ஐ.சி.டி.இ., எனும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு.
அதன் துணைத் தலைவர் டாக்டர் அபய் ஜெரே, தினமலர் கல்விமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி:ஏ.ஐ.சி.டி.இ., ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டியின் முக்கியத்துவம் என்ன? அவற்றில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு எவ்வாறு உள்ளது?
நமது நாட்டின் இளம் மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து, சமூகத்தில் நிலவும் பிரச்னைகளுக்கு, அவர்களை தீர்வு காண ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் உலகிலேயே மிகப்பெரிய ஒன்றாக, 'ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்' திகழ்கிறது. மாணவர்களிடம் கண்டுபிடிப்பில் ஆர்வத்தையும், சிக்கலைத் தீர்க்கும் மனநிலையையும் இப்போட்டி மேம்படுத்துகிறது.
கடந்த ஆண்டு 26 அமைச்சகங்களின் 300க்கும் அதிகமான வேறுபட்ட பிரச்னைகள் கருப்பொருளாக வைக்கப்பட்டன. இந்த ஆண்டும் ரயில்வே, பாதுகாப்பு, உள்துறை என பல்வேறு அமைச்சகங்கள், பிரச்னைகளுக்கான தீர்வை இப்போட்டியின் வாயிலாக எதிர்நோக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
கடந்த 7 ஆண்டுகளாக நடத்தப்படும், மாணவர்களின் சிறந்த படைப்பாற்றல் திறனை நம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் இப்போட்டியில், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களே அதிகளவில் பங்கேற்றுள்ளனர் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த ஒரு பிரசனைக்கும், தமிழக மாணவர்கள் கொடுக்கும் தீர்வு மிகவும் அற்புதமானது. இந்த ஆண்டிற்கான போட்டி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டும், தமிழக மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று, சிறப்பான தீர்வுகளை தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நாட்டில் தரமான உயர்கல்வியை வழங்குவதில் ஏ.ஐ.சி.டி.இ., மேற்கொள்ளும் முயற்சிகள் எவை?தரமான உயர்கல்வி வழங்கப்படுவதற்கான பல்வேறு முயற்சிகளை ஏ.ஐ.சி.டி.இ., தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இன்ஜினியரிங், மேலாண்மை போன்ற பாரம்பரிய துறைகள் சார்ந்த கல்வி நிறுவனங்களை மட்டுமே இதுவரை ஏ.ஐ.சி.டி.இ., தன்வசம் வைத்திருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் பி.பி.ஏ., பி.சி.ஏ., ஆகிய படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களும் ஏ.ஐ.சி.டி.இ., கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தகைய படிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில், மாதிரி பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. விரைவில் இப்படிப்புகளின் தரம் உயரும்.
புதிய பாடத்திட்டங்களை வகுத்தல், ஆசிரியர் பயிற்சி, உதவித்தொகைகளை வழங்குதல், கருத்தரங்குகளை நடத்துதல் மற்றும் கருத்தரங்குகளை நடத்த கல்வி நிறுவனங்களை ஊக்கப்படுத்துதல் என ஏராளமான முயற்சிகளை ஏ.ஐ.சி.டி.இ., முன்னெடுத்தாலும், அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, 'ஆசிரியர் பயிற்சி' தான். ஏனெனில், தரமான ஆசிரியர்களால் நடத்தப்படும் படிப்புகளின் தரம் நிச்சயம் உயரும். கல்வியின் தரம் உயர ஆசிரியர்கள் மேம்பட வேண்டியது அவசியம். இந்த ஆண்டு மட்டும் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படுவதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதைய தேவைக்கு ஏற்ப பாடத்திட்டங்கள் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை என்றும், பெரும்பாலும் காலாவதியான பாடத்திட்டங்களே வழங்கப்படுகின்றன என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறதே?தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டம் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படுவதில்லை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இனியும் இடமில்லை. ஏனெனில், ஒவ்வொரு துறைகளின் வளர்ச்சிக்கும் ஏற்ப, பாடத்திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்களுக்கு முதலில், வளர்ந்து வரும் துறைகளில் மேம்பட்ட இரண்டு வாரகால பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்திய மாணவரும் சர்வதேச அளவில் சிறந்த குடிமகனாக வளம்வர வேண்டும் என்பதற்காக 'சர்வதேச மனித நன்மதிப்பு' சார்ந்த சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இவைதவிர, 'குவாலிட்டி இம்ப்ரூவ்மெண்ட் புரொகிராம்' எனும் தர மேம்பாட்டு சான்றிதழ் பயிற்சியும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படுகிறது. டேட்டா சயின்ஸ், பிளாக் சயின், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மிஷின் லேர்னிங் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் ஐ.ஐ.டி., சி-டாக் போன்ற நிறுவனங்களில் 6 மாத காலம் வரையில் பயிற்சி அளிக்கப்படுகிறது. தரத்தையும், தற்போதைய மற்றும் எதிர்கால தேவையையும் முன்னிறுத்தியே இந்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான படிப்புகளுக்கும் மேம்படுத்தப்பட்ட, முன்மாதிரியான பாடத்திட்டங்கள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கான பணியும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஏ.ஐ.சி.டி.இ.,யின் புதிய முன்னெடுப்புகள் எவை?சமீபகாலமாக, புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கும், தொழில்முனைவுக்கும் ஏ.ஐ.சி.டி.இ.,யால் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் புத்தாக்க சிந்தனையை வளர்க்கும் இடமாக ஒரு 'ஐடியா ஹப்' போன்று செயல்பட வேண்டும் என்று விரும்புகிறோம். அதேபோல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் தொழில்முனைவோர் மையமும் (இ-செல்) தீவிரமாக செயல்பட வேண்டும். அதற்கான முயற்சியாக 30 'இன்னோவேஷன் சென்டர்'கள் நிறுவப்பட்டுள்ளன. தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் இணைப்பு மையமாக செயல்பட்டு, தொழில்நுட்பங்கள் பகிரப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஐ.பி., பதிவும் மேற்கொள்ளப்படும். புத்தாக்க சிந்தனை கொண்டவர்கள் தொழில்முனைவோராக உயர அனைத்து வகையிலும் உதவிகள் மேற்கொள்ளப்படும்.
-சதீஷ்குமார் வெங்கடாசலம். by dinamalar news
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.