திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்
பணியிடங்களை தமிழக அரசு விரைவில் நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளை பாதுகாக்கவும், அதன் கல்வித் தரத்தை மேம்படுத்தவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழக்கிழமை பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலாளர் எம்.வீரபத்திரன் தலைமை வகித்தார்.
மாவட்ட நிர்வாகிகள் எம்.சிவக்குமார், கே.குமரேசன், பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், கல்வித் தரத்தில் திருவண்ணாமலை மாவட்டம் பின்தங்கியுள்ளது.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 32-வது இடத்தைப் பிடித்து கடைசி இடத்தில் உள்ளது வேதனையளிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறையும். தனியார் பள்ளிகளை தேடக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால், பள்ளிக் கல்வி தனியார் மயமாகி, ஏழைக் குழந்தைகளின் கல்வி எட்டாக் கனியாகிவிடும். மாணவர் எண்ணிக்கை குறைந்ததால் தமிழகத்தில் பல ஆயிரம் அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ஏழைக் குடும்பங்களில் அடுத்த தலைமுறையாவது மேம்பட வேண்டுமானால் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்துதர வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,411 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் உள்ளதாகவும், பல பள்ளிகளில் ஆய்வகம், சுற்றுச்சுவர், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது மார்க்சிஸ்ட் கட்சியினர் நடத்திய நேரடி ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதன் பிறகாவது மாவட்ட நிர்வாகமும், கல்வித் துறையும் மாவட்டத்தின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், அரசுப் பள்ளிகளில் பல்வேறு நெருக்கடிகள் இருந்தபோதும், 77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், அவர்களின் வெற்றிக்கு உழைத்த ஆசிரியர்களையும் பாராட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.