பள்ளிக்கல்வித்துறையின் கீழ், நிர்வாக இடமாறுதல்களால், கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் அல்லல் படும் சூழல் உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 23 ஆயிரத்து 522 அரசு தொடக்கப் பள்ளிகள், 7,651 அரசு நடுநிலைப்பள்ளிகள், 2,844 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2,488 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும், மே இறுதியில் ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, ஜூன் மாதம் புதிய பள்ளிகளில் பணியமர்த்தப்படுவது வழக்கம்.கலந்தாய்வில், ஒவ்வொரு மாவட்டத்திலும், காலி பணியிடங்கள் முழுமையாக காண்பிக்கப்பட்டு, பணி மூப்பு அடிப்படையில் இடமாற்றம் வழங்கப்படவேண்டும். ஆனால், கலந்தாய்வின் போது காலிப்பணியிடங்கள் மறைக்கப்பட்டு, அந்த இடங்களுக்கு ஐந்து லட்சம் முதல் ரூபாய் ௧௦ லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்று, ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதுகுறித்து, தொடர்ந்து புகார் வந்தும் பள்ளிக்கல்வித்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும், ௩௦௦ முதல் ௪௦௦ வரை ஆசிரியர்கள் நிர்வாக மாறுதல் என்ற பெயரில், இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால், பணிமூப்புடன் பல ஆண்டுகள் காத்திருக்கும் ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களுக்கும், ஒன்றியங்களுக்கும் வர முடியாமல் தவித்து வருகின்றனர்.குறிப்பாக, தமிழக மேற்கு மண்டலங்களை சேர்ந்த, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு அதிக அளவில் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
கல்வியாளர் மற்றும் ஆசிரியர் முருகசெல்வராஜ் கூறியதாவது:நிர்வாக மாறுதல்கள் என்ற பெயரில், ஒரு குறிப்பிட்ட பள்ளிகளில், உபரியாக ஆசிரியர்கள் குவிக்கப்படுகின்றனர். அதே சமயம், கிராமப்புற, பின்தங்கிய பகுதிகளில், ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, மாணவர்கள் அல்லல்படுகின்றனர்.ஆசிரியர், மாணவர்கள் விகிதாசாரத்தை ஆகஸ்ட் மாதத்தில் முடிவு செய்து, மே மாதத்தில் கலந்தாய்வு நடத்தி, இடமாற்றம் செய்யும் வழக்கம், பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகை செய்கிறது. இதற்கு மாற்றாக, ஏப்ரல் இறுதியிலேயே, மாணவர்கள் எண்ணிக்கை வரையறை செய்து, மே இறுதியில் உபரி ஆசிரியர்களை தேவையான பள்ளிகளில் பணி அமர்த்திய பின், கலந்தாய்வு நடத்தவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.