தமிழகத்தில் பல்கலை துணைவேந்தர்களை தேர்வு செய்யும் தேர்வுக்
குழுக்களில் (சர்ச் கமிட்டி), அதிகரிக்கும் அரசியல் தலையீடால், தகுதியான உறுப்பினர்கள் புறக்கணிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் 40 பல்கலைகள் இருந்தும், உலகின் சிறந்த பல்கலைகள் பட்டியலில், ஒன்றுகூட இடம்பெற முடியவில்லை. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை 43 சதவீதம் என பிற மாநிலங்களை ஒப்பிட்டு, அரசு புள்ளி விவரங்களை அடுக்கினாலும், உயர்கல்வித்துறை தரம் பின்தங்கி உள்ளது என்பதே உண்மை. இதற்கு அவர்கள் கூறும் பிரதான காரணம், பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) வழிகாட்டுதலின்படி, தகுதியான துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை என்பதும், அரசியல் தலையீடால் துணைவேந்தர் தேர்வுக்குழுவில் தகுதியான உறுப்பினர்கள் இடம்பெற முடியவில்லை என்பதும் தான்.
இதை நிரூபிக்கும் வகையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், துணைவேந்தர் தேர்வு குழுக்களில், வியாபாரிகள், தொழிலதிபர்கள் என கல்வித் துறைக்கு சம்மந்தமில்லாதவர்கள் இடம் பெறுகின்றனர். தேர்வு குழுவை தேர்வு செய்வது எப்படி: துணைவேந்தர் பதவிக்காலம் முடிந்த நிலையில், புதியவரை தேர்வு செய்ய, செனட், சிண்டிகேட்டில், தலா ஒரு உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டும், அரசு நியமிக்கும் பிரதிநிதி தலைமையில், தேர்வுக் குழு ஏற்படுத்தப்படும். விண்ணப்பித்தவர்களில் தகுதியுள்ள மூன்று நபர்களை அரசுக்கு பரிந்துரை செய்வர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இக்குழுக்களில், வெளிப்படை தன்மை இல்லை என்ற ஆதங்கம் கல்வியாளர்களை கவலையடைய வைத்துள்ளது. குறிப்பாக அரசு நியமிக்கும் பிரதிநிதிகள் அடுத்தடுத்த குழுக்களில் தொடர்ந்து இடம் பெறுவதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன், கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், முன்னாள் துணைவேந்தர்கள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., / ஐ.பி.எஸ்., அதிகாரிகள், தேர்வுக் குழுவில் இடம் பெற்றனர். ஆனால், தற்போது வியாபாரிகள், தொழிலதிபர்கள், டியூஷன் சென்டர்கள் நடத்துபவர்கள் என, கல்வித் துறைக்கு துளியும் சம்மந்தம் இல்லாதவர்கள் இடம் பெறுகின்றனர். அரசியல் பின்னணி இருப்பதால், தகுதியானவர்கள் விண்ணப்பித்திருந்தாலும், புதிய துணைவேந்தரை முடிவு செய்வதில், அப்பட்டமாக விதி மீறப்படுகின்றன. துணைவேந்தர் பதவியை கைப்பற்ற திரைமறைவில் பல கோடி ரூபாய் பேரம் நடக்கிறது.
இதுபோன்ற நெருக்கடியால், தகுதியில்லாத துணைவேந்தர்கள்தேர்வு செய்யப்பட்டு, பிரச்னை நீதிமன்றம் சென்று கல்வித்துறைக்கு தலைகுனிவை ஏற்படுத்துகின்றன. தேர்வுக் குழுக்களை நியமிக்க தகுதி: இதற்கென பிரத்யேக விதிமுறைகள் எதுவும் பல்கலை சட்ட விதிகளில் இல்லை. உறுப்பினர்களின் தகுதிகள் குறித்தும் குறிப்பிடப்படவில்லை. எனவே, புதிய விதிகளை அரசு உடனே உருவாக்க வேண்டும். ஒரு குழுவில் இடம்பெற்ற வரை மீண்டும் நியமிக்கக் கூடாது என்பதை கட்டாயமாக்க வேண்டும். உறுப்பினர் ஆக நியமிக்கப்படுபவர் பி.எச்.டி.,முடித்திருக்க வேண்டும்.
தேர்வுக்குழுவில் இடம்பெற ஆர்வம் ஏன் இதுகுறித்து முன்னாள் துணைவேந்தர்கள் சிலர் கூறியதாவது:
தி.மு.க.,- அ.தி.மு.க., என எந்தகட்சிகள் பதவியில் இருந்தாலும் துணைவேந்தர் பதவிக்கு அரசியல் பின்னணி கட்டாயம் தேவைப்படுகிறது. மேலும் கோடிக்கணக்கில் பேரமும் நடக்கிறது. இதில், பெரும் தொகை குழு உறுப்பினர்களுக்கு செல்கிறது. இதற்காக தான் அமைச்சர், அதிகாரிகளை பிடித்து குழுவில் இடம் பெற கடும் போட்டி நிலவுகிறது. இதில் சில உறுப்பினர்கள் ஒரு காசு கூட வாங்காமல் கடைசி வரைநேர்மையாக உள்ளனர் என்பது ஆறுதல் பட வேண்டிய விஷயம், என்றனர்.
ரூ. 10 லட்சம் பேரம் பேசும் நபர் தற்போது மதுரை காமராஜ், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் உட்பட ஐந்து பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்களை தேர்வு செய்வதற் குதேர்வுக் குழுக்களை அரசு அமைத்துள்ளது. இக்குழுக்களில் இடம் பெற்ற நபர் ஒருவர், துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்த சிலரை அலைபேசியில் அழைத்து, பணம் கொடுத்தால் பதவிக்கு பரிந்துரைக்கிறேன், என ரூ.10 லட்சம் வரை பேரம் பேசி வருகிறார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.