கல்வித்துறையில் எந்தாண்டிலும் இல்லாத அளவிற்கு தற்போது முதன்மை கல்வி அலுவலர்களின் (சி.இ.ஓ.,) நேர்முக உதவியாளர் (பி.ஏ.,க்கள்) பணியிடங்களை நியமிப்பதில் அரசியல் சிபாரிசு அதிகரித்துள்ளதால் தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மாவட்ட கல்வித் துறையில் சி.இ.ஓ.,விற்கு அடுத்த நிலையில் அவர்களின் பி.ஏ.,க்கள் பணியிடங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு சி.இ.ஓ.,விற்கு தலைமையாசிரியர் அந்தஸ்தில் மேல்நிலை பி.ஏ., உயர்நிலை பி.ஏ., என இருவர் உள்ளனர்.
இவை இத்துறையை மாவட்ட அளவில் நிர்வகிக்கும் நிர்வாக பணியிடங்கள் ஆகும். அனைத்து 'பைல்'களும் இவர்கள் பார்வையிட்ட பின் தான் சி.இ.ஓ.,வுக்கு செல்லும்.
இதுபோல், ஒருங்கிணைந்த கல்வித் திட்டப் பணி செயல்பாடுகளை கண்காணிக்க சி.இ.ஓ.,விற்கு அடுத்த நிலையில் மேல்நிலை தலைமையாசிரியர் அந்தஸ்தில் உதவித் திட்ட அலுவலர் (ஏ.டி.பி.சி.,) பணியிடம் உள்ளது.
பல மாவட்டங்களில் சி.இ.ஓ.,க்களை விட இப்பணியிடங்களில் உள்ளோர் 'பவர் புல்'ஆக வலம் வருகின்றனர். இவர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுகள். தற்போது பல மாவட்டங்களில் பதவி நீட்டிப்பில் தொடர்கின்றனர்.
இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன் இவர்களை மீண்டும் பள்ளிகளுக்கே தலைமையாசிரியர்களாக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே காலியாகும் இப்பணியிடங்களை கைப்பற்ற உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சிபாரிசுடன் கல்வி அமைச்சர் அலுவலகத்திற்கு படையெடுக்க துவங்கியுள்ளனர். இதனால் தகுதியுள்ள தலைமையாசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
நீதிமன்றத்தை நாட முடிவு
தலைமையாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: இப்பணியிடங்களில் பணியாற்றுவோரின் பதவிக் காலம் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முடிவுக்கு வருகிறது. சீனியர் நிலையில் உள்ள மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் தான் நியமிக்க வேண்டும். கடந்தமுறை பல மாவட்டங்களில் ஜூனியர் நிலையில் நியமிக்கப்பட்டனர்.
தற்போதும் அரசியல், அதிகாரிகள் சிபாரிசில் பலர் முயற்சிக்கின்றனர். நேரடி நியமனம் என்பதால் இதை வெளிப்படையாக நிரப்ப வேண்டும். சீனியருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசியல் தலையீடு, 'கவனிப்பு' காரணமாக ஜூனியர்கள் நியமிக்கப்பட்டால் பல மாவட்டங்களில் நீதிமன்றங்களுக்கு சென்று நியாயம் கேட்கும் மனநிலையில் உள்ளோம் என்றனர்.
இதற்கிடையே 'பொதுமாறுதல் கலந்தாய்வில் தற்போது பணியில் உள்ள பி.ஏ.,க்கள், உதவி திட்ட அலுவலர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்' என இயக்குநர் கண்ணப்பனிடம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் மனு அளித்துள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.