WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 28, 2014

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவனின் பிளஸ்-2 கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயம் தேர்வுத்துறை இயக்குநர் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு

மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவனின் பிளஸ்-2 கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயம் தேர்வுத்துறை இயக்குநர் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவனின் கணித விடைத்தாளில் 4 பக்கங்கள் மாயமானது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பிளஸ்-2 தேர்வு புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டு இருந்ததாவது:- என்னுடைய மகன் பிரகாஷ், புதுக்கோட்டை செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தான். கடந்த மார்ச் மாதம் பிளஸ்-2 தேர்வு எழுதினான். தேர்வு முடிவில் 1200-க்கு 1080 மதிப்பெண்கள் பெற்றான். இயற்பியல் பாடத்தில் 198 மதிப்பெண்ணும், வேதியியல் பாடத்தில் 189 மதிப்பெண்ணும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் 178 மதிப்பெண்ணும், கணித பாடத்தில் 153 மதிப்பெண்ணும் பெற்று இருந்தான். கணித தேர்வை நன்றாக எழுதி இருந்த போதிலும் குறைவான மதிப்பெண் கிடைத்தது எனது மகனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், கணிதம், ஆங்கிலம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் ஆகிய பாடங்களுக்கான விடைத்தாள் நகலை அளிக்கும்படி அரசு தேர்வுத்துறைக்கு விண்ணப்பித்தேன். விடைத்தாள் நகல் அதன்படி, விடைத்தாள் நகலை இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்தது. ஆங்கிலம், வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடங்களுக்கான விடைத்தாள் நகலை மட்டும் இணையதளத்தின் மூலம் பெற்றேன். கணித பாடத்துக்கான விடைத்தாள் நகலை இணையதளத்தின் மூலம் பெற முடியவில்லை. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியிடம் தெரிவித்தேன். அவர், கணித பாடத்துக்கான விடைத்தாள் நகலை கொடுத்தார். 44 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் நகலில் 35 முதல் 38 பக்கங்கள் இல்லாமல் இருந்தன. அந்த பக்கங்களில் தான் 40, ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு விடை எழுதியுள்ளான். 100 மதிப்பெண்ணுக்கான 10 கேள்விகளுக்கு விடை எழுதி 97 மதிப்பெண் பெற்றுள்ளான். 60 மதிப்பெண்ணுக்கான 10 கேள்விகளுக்கு விடை எழுதி 56 மதிப்பெண் பெற்றுள்ளான். ஆனால், 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு ஒரு மதிப்பெண் கூட வழங்கப்படவில்லை. நியாயமற்றது பொதுவாக ஒரு கேள்விக்கு விடை எழுதவில்லை என்றால் விடைத்தாளின் முன்பகுதியில் மதிப்பெண் வழங்கும் இடத்தில் ‘-’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். தவறாக எழுதி இருந்தால் ‘0’ (பூஜ்யம்) மதிப்பெண் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். எனது மகனுக்கு வழங்கப்பட்டுள்ள விடைத்தாளில் 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் ‘0’ மதிப்பெண் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி என்றால், என் மகன் 40 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும் விடை எழுதி உள்ளான் என்று தான் அர்த்தம். அப்படி இருக்கும் போது, என் மகன் எழுதிய முழுமையான விடைத்தாள் நகலை வழங்காதது நியாயமற்றது. இதனால், என் மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. தேர்வுத்துறையின் அலட்சியத்தால் என் மகனுக்கு சிறந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. எனவே, என் மகன் எழுதிய கணித பாடத்துக்கான முழுமையான விடைத்தாளை வழங்க உத்தரவிட வேண்டும். என் மகனுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்ணை வழங்கி, பொறியியல் கலந்தாய்வில் என் மகனின் பெயரை உரிய இடத்தில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இந்த மனு நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் மகனுக்கு கணித பாடத்துக்கான முழுமையான விடைத்தாள் வழங்கப்படாதது குறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.