நாடு முழுவதும் உள்ள மாணவர்களிடையே பகுப்பாய்வுச் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட 'அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்' (OOBT) எனும் இலவசக் கணிதப் பயிற்சித் திட்டத்துக்கான விண்ணப்பங்களை ஐஐடி மெட்ராஸ் வரவேற்கிறது.
ஐஐடி மெட்ராஸ் சார்பில் பிரவர்தக் டெக்னாலஜிஸ் ஃபவுண்டேஷன் (IITM Pravartak Technologies Foundation) பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், கல்வியாளர்களிடையே திறனை வளர்க்க பல்வேறு பாடத்திட்டங்களைக் கொண்டு வந்துள்ளது.
இந்த பயிற்சி ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 6ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கற்றலில் ஆர்வமுள்ள எவரும் இதில் இணையலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலையில், மாணவர்கள் புதிர்களைத் தீர்ப்பது, தேதி எண்களின் வரிசைமாற்றம், வார நாள்களின் தொடர் வருகையை அடிப்படையாகக் கொண்ட சுவாரஸ்யமான பண்புகள், ஒற்றை-இரட்டை எண்கள், காட்சிவழி விளக்கம், விடுபட்ட இலக்கங்கள், மறைப்புக் கணிதம் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பார்கள்.
இப்பயிற்சித் திட்டம் நான்கு தனித்தனி நிலைகளாக நடத்தப்படுகிறது.
இதில் 5 முதல் 11-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இலவசமாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.
மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு மணிநேரப் பாடங்கள் வீதம், 10 வாரங்களுக்கு இணையவழியில் பயில வேண்டும்.
அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சிகள் (assignments) வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு மாணவர்கள் https://iitmpravartak.org.in/out-of-box-thinking என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி கூறியிருப்பதாவது, கணிதத்தில் புதுமையான சிந்தனையைப் பயன்படுத்துவது படைப்பாற்றலை வளர்ப்பதோடு, வழக்கமான சூத்திரங்கள் மற்றும் முறைகளுக்கு அப்பாற்பட்டு சிந்திப்பதை ஊக்குவிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
கணிதம் என்பது சரியான விடையைக் கண்டறிவது மட்டுமல்ல; அது பல்வேறு சிந்தனை முறைகளை ஆராய்வதும், கோட்பாடுகளை ஆழமாகப் புரிந்துகொள்வதும் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் எடுத்திருக்கும் இலவச முன்னெடுப்பின் மூலம், தரமான கணிதக் கல்வியை ஒவ்வொரு கற்பவருக்கும் கிடைக்கச் செய்யவும், வழக்கமான முறைகளுக்கு அப்பால் சிந்திக்குமாறு நாடு முழுவதும் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கவும் விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.