WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, July 5, 2014

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் முதலிடம்: மாணவர்களுக்கு முதல்வர் பரிசு


10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் ஜெயலலிதா சென்னையில் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்த மாணவர்கள் அனைவருக்கும் ஒளிமயமான எதிர்காலம் அமைய தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அதோடு, அவர்களின் மேற்படிப்புக்கான செலவினையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது. இந்த ஆண்டு 10-ஆம் வகுப்புத் தேர்வில் 19 பேர் முதலிடத்தையும், 125 பேர் இரண்டாவது இடத்தையும், 321 பேர் முதலிடத்தையும் பிடித்தனர். இதுவரை இல்லாத அளவாக முதல் மூன்று இடங்களை 465 பேர் பெற்றனர். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடத்தை எஸ்.சுஷாந்தி, இரண்டாவது இடத்தை ஏ.எல்.அலமேலு, மூன்றாவது இடத்தை டி.துளசிராஜன், எஸ்.நித்யா ஆகியோரும் பெற்றனர். இவர்களோடு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சமூக நலத்துறை, வனத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதா ரொக்கப் பரிசுகளை வழங்கினார். 10-ஆம் வகுப்புத் தேர்வு: 2013-14-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 19 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதோடு, மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் முதலிடத்தைப் பிடித்த மாணவருக்கும், செவித் திறன் குறைந்தோருக்கான பள்ளிகளில் முதலிடத்தைப் பிடித்த மாணவிக்கும் தலா ரூ.25 ஆயிரமும், வனத்துறைப் பள்ளிகளில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த மாணவிக்கு ரூ.25 ஆயிரமும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் முதலிடம் பெற்ற 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும், சமூக நலம் மற்றும் சத்துவுணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள், அரசு சேவை இல்லங்களில் பயின்ற மாணவ, மாணவியரில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த 2 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் என 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்தமாக ரூ.6 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கப் பரிசை முதல்வர் வழங்கினார். பிளஸ் 2 தேர்வு: பிளஸ் 2 தேர்வில் தமிழை முதல் பாடமாகக் கொண்டு மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த மாணவி எஸ்.சுஷாந்திக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசையும் முதல்வர் வழங்கினார். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுள் மாநில அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவிக்கு ரூ.50 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் பார்வையற்றோருக்கான பள்ளிகளில் பயின்ற மாணவிகளில் முதலிடம் பெற்ற மாணவி, செவித் திறன் குறைந்தோருக்கான பள்ளிகளில் பயின்றவர்களில் முதலிடத்தைப் பிடித்த 2 மாணவிகள் ஆகியோருக்கு தலா ரூ.50 ஆயிரமும், வனத் துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவியரில் மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்த ஒரு மாணவி, 2 மாணவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்தையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதோடு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த 2 மாணவிகள், ஒரு மாணவருக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசும், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கீழ் இயங்கும் அரசு குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் அரசு சேவை இல்லங்களில் பயின்ற மாணவ, மாணவியரில் முதலிடத்தைப் பிடித்த 2 மாணவிகளுக்கு தலா ரூ.6 ஆயிரத்தையும் முதல்வர் வழங்கினார். நிகழ்ச்சியில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதலிடங்களைப் பிடித்த மொத்தம் 42 மாணவ, மாணவியருக்கு ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சர் பா.வளர்மதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.   2, 3-ஆம் இடங்களுக்கு இன்று பரிசு வழங்கல் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளில் மாநில அளவில் இரண்டாவது, மூன்றாவது இடங்களைப் பிடித்தவர்களுக்கு சென்னையில் சனிக்கிழமை (ஜூலை 5) பரிசு வழங்கப்படுகிறது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்.சி.சி. மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி. வீரமணி இவர்களுக்கு பரிசுகளை வழங்க உள்ளார். அரசுத் துறை பள்ளிகளையும் சேர்த்து 184 பேர் இரண்டாவது இடத்தையும், 382 பேர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.