ஒருவரின் சிந்தனை வேறு; மற்றவர் சிந்தனை வேறு. ஒருவர், மற்றவர் அல்ல. ஒருவரின் சிந்தனையை மற்றவர் காப்பியடித்தால் அவர் சிந்திப்பது எப்போது? காப்பியடிப்பது என்பது மாணவர்களின் தேர்வுக்கும் பொருந்தும்.
படித்து, சிந்தித்து தேர்வு எழுதும் மாணவரை பார்த்து, படிக்காத எந்த முயற்சியும் இல்லாத மாணவன் காப்பியடித்து தேர்வு எழுதினால் என்னாகும்?
பெருகிவரும் இந்த பழக்கம் பற்றி நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மனநல பேராசிரியர் ஜி.ராமானுஜம் கூறியதாவது: எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கான மதிப்பெண் அளவுகோல்தான் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு. வாழ்வியலோடு தீர்மானிக்கும் மதிப்பெண் அளவுகோல்தான் பிளஸ் 2 தேர்வு. அதனால்தான் மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் தேர்வொன்றே திருவிழாவாய், அதற்காகவே தங்களது பத்துமாத மதிப்பெண் கனவை சுமந்து வாழ்கின்றனர். இதுவே தேர்வறையில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கும் காரணமாகிறது.
சில மாணவர்களுக்கு விதிமுறைகளை மீறுவதில் எப்போதுமே ஈடுபாடு இருக்கும். தேர்வறையில் மற்ற மாணவர்களைப் பார்த்து காப்பியடிப்பது; கொண்டு வந்த பிட் பேப்பரைப் பார்த்து எழுதுவது போன்றவற்றை சவாலாக செய்யப் பிடிக்கும். இவர்களைப் போன்றவர்களுக்கு த்ரில் என்கிற உடனடி நன்மைகளை மட்டுமே நினைக்க முடியும். அதனால் ஏற்படும் எதிர்கால பாதகங்களை நினைத்துப் பார்க்க தெரிவதில்லை.
குறுக்குவழியில் செல்வது, விதிமுறைகளை மீறுவது, மற்றவர்களைப் பற்றி கவலைப்படாதது போன்ற பழக்கங்களுக்கு மாணவர்களை மட்டும் குறைசொல்லக் கூடாது. வீட்டில் பெற்றோர் முன்மாதிரியாக இருக்க வேண்டும். நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துத்தானே பிள்ளைகளும் கற்றுக் கொள்கின்றனர். சில பள்ளிகளில், ஆசிரியர்களே, காப்பியடிப்பதையும், பிட் அடிப்பதையும் ஊக்கப்படுத்துவது வேதனையான விஷயம்.
எல்லா மாணவர்களும், எழுதுவது ஒரே மாதிரிதானே என்கிற அலட்சிய உணர்வுதான் காப்பியடிப்பதும், பிட் அடிப்பதும் உருவாகக் காரணம். இதற்கு கல்விமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வெறுமனே மனப்பாட கல்விக்கு தரும் முக்கியத்துவத்தை குறைக்க வேண்டும். செய்முறை கல்வி, மாணவர்களின் ஆளுமைத் திறனுக்கு மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
நீச்சலோ, தடகளமோ... ஜெயிப்பவனுக்குத்தானே சிம்மாசனம்? கல்வி என்பது விஷயங்களை தெரிந்து கொள்வதற்குதான். அதை மாணவர்களின் தனித்துவத்தை வளர்ப்பதற்கான கருவியாக பயன்படுத்த வேண்டும், என்றார். எனவே யாரும் யாரைப் பார்த்தும் காப்பியடிக்காதீர்!
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.