தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வாரியத் தேர்வு நடந்தது. ஏப்ரல் 19-ந் தேதி எஸ்.ஓ.எம் (ஸ்டெர்ன்த் அப் மெட்டீரியல்) தேர்வு நடந்தது.
இந்த நிலையில் தேர்வுக்கு முதல்நாளான 18-ந் தேதி எஸ்.ஓ.எம். தேர்வின் வினாத்தாள் என்று ஆரணியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’பில் வெளியானது. இதுகுறித்து அந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஒருவர் அவரது பேராசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவரும் ‘வாட்ஸ் அப்’பில் வினாத்தாள் வந்த விவரம் குறித்து கல்லூரி முதல்வர் ஆறுமுகத்திடம் கூறினார்.
அதைத் தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஆறுமுகம் ‘வாட்ஸ் அப்’பில் வந்த வினாத்தாளையும், மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருந்த வினாத்தாளையும் சரிபார்த்தார். அப்போது 2 வினாத்தாள்களும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முதல்வர் ஆறுமுகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
வேலூர் சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் ஆரணியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் ‘வாட்ஸ் அப்’பில் ஆரணியை சேர்ந்த மாணவனுக்கு தேர்வு வினாத்தாளை அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூருக்கு சென்று தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், அந்த பாலிடெக்னிக் கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார் (வயது 45), பேராசிரியர்கள் மது (29), அம்பாசங்கர் (32), உதவியாளர் ராஜேஷ் (30) ஆகியோர் இந்த வினாத்தாளை வெளியிட்டது தெரியவந்தது.
இதையடுத்து பேராசிரியர்கள் மது, அம்பாசங்கர், ராஜேஷ் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் கைது செய்தனர். கல்லூரி துணை முதல்வர் வினோத்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.
கைதான பாலிடெக்னிக் உதவியாளர் ராஜேஷ், அங்கு வேலை பார்த்த முன்னாள் ஊழியர் பிரகாஷ் என்பவரிடம் ரூ.5 ஆயிரம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாளை கொடுத்துள்ளார். அவர் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வினாத்தாளை வாட்ஸ்-அப்பில் வெளியிட்டுள்ளார். எத்தனை மாணவர்களிடம் எவ்வளவு பணத்திற்கு விற்பனை செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருவதை அறிந்த பிரகாஷ் தலைமறைவாகி விட்டார்.
துணை முதல்வர் வினோத்குமார், முன்னாள் ஊழியர் பிரகாஷ் ஆகிய 2 பேரும் சிக்கினால் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது தெரியவரும்.
சி.பி.சி.ஐ.டி. போலீசின் ஒரு பிரிவினர் கடலூரில் முகாட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.