WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 11, 2023

அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தள்ளிவைப்பு: டிச.13-ம் தேதி தொடங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

 



மழை பாதிப்பை கருத்தில் கொண்டு, 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு இன்றுதொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டன. தேர்வு வரும் 13-ம் தேதி தொடங்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு மாநில அளவில் ஒரேவினாத்தாள் முறையில் அரையாண்டு மற்றும் பருவ தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, அரையாண்டு மற்றும் 2-ம் பருவ தேர்வுக்கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை கடந்த மாதம் வெளியிட்டது. அதில் 11, 12-ம் வகுப்புக்கு டிசம்பர் 7-ம் தேதியும், மற்ற வகுப்புகளுக்கு டிசம்பர் 11-ம் தேதியும் தேர்வுகள் தொடங்கும் என்று கூறப்பட்டிருந்தது.


இதற்கிடையே, மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 4 மாவட்டங்களுக்கும் கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

இதையடுத்து, டிசம்பர் 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு, தேர்வு கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வகுப்புகளுக்கும் அரையாண்டு தேர்வுகள் இன்று (டிசம்பர் 11) தொடங்கி நடக்க இருந்தன. இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், நீண்ட விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால், மாணவர்கள் நலன் கருதி அரையாண்டு தேர்வு தேதியை 2-வது முறையாக மீண்டும் மாற்றம் செய்துமுதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ‘‘பாடப்புத்தகங்கள் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது. இதை கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 11-ல் (இன்று) தொடங்க உள்ள தேர்வுகளை டிசம்பர் 13-ம் தேதி முதல் மேற்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வி துறைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.

அதை ஏற்று, 1 முதல் 12-ம் வகுப்புக்கான புதிய தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்டது. அதன்விவரம்:

மாநில பாடத் திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 13 முதல் டிசம்பர் 22-ம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இடையே டிசம்பர் 16, 17 (சனி, ஞாயிறு) தேதிகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தேர்வுகள் நடைபெறும். 1 முதல் 5-ம் வகுப்புகளுக்கு காலை 10.30 - 12.30 மணி, 6 முதல் 10-ம் வகுப்புகளுக்கு காலை 10 - 12 மணி, பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 - 12.45 மணி, பிளஸ் 2 வகுப்புக்கு மதியம் 1.15 -4.30 மணி என தேர்வுகள் நடைபெறும். டிசம்பர் 23 முதல் ஜனவரி 1-ம்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும். பள்ளிகள் மீண்டும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படக்கூடும் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு: மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 4-ம் தேதி முதல் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஒருவார விடுமுறைக்கு பிறகு, அனைத்து பள்ளி, கல்லூரிகளும் இன்று திறக்கப்படுகின்றன. அரசு உத்தரவின்பேரில் பள்ளி, கல்லூரி வளாகங்களில் மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் விதமாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.