WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, April 6, 2025

நிதிச் சுமையால் மூச்சுத் திணறும் தாய்த்தமிழ்ப் பள்ளிகள்! - என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

மத்திய அரசும் தமிழக அரசும் ஆளுக்கொரு பக்கம் மொழிப்போரை நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், 30 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழகத்தில் வேர்விட்டு வளர்ந்த தாய்த்தமிழ் பள்ளிகள் நிதிச் சுமையால் மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கின்றன.

1993-ம் ஆண்டு வாக்கில், தமிழ்த்​தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகுவின் முன்னெடுப்பால் தமிழகமெங்கும் தாய்த்​தமிழ்ப் பள்ளிகள் உருவாகின. அப்படி உருவாகி நூற்றுக்கும் மேலாக பெருகிய அந்தப் பள்ளி​களில் இப்போது 17 பள்ளிகள் மட்டுமே செயல்​பாட்டில் உள்ளன. மற்ற பள்ளிகள் எல்லாம் பல்வேறு காரணங்​களால் இழுத்து மூடப்​பட்​டு​விட்டன

இதுகுறித்து நம்மிடம் பேசிய தாய்த்​தமிழ் கல்விப்பணி அறக்கட்டளை பள்ளி​களின் கூட்டமைப்பு தலைவர் சிவ. காளிதாசன், “1993-ம் ஆண்டு சென்னை அம்பத்தூர் மேனாம்​பேட்டில் ரூ. 1 மட்டும் நன்கொடை பெற்றுக்​கொண்டு, தாய் குழந்​தைக்கு பால் புகட்​டுவது போன்ற படத்தை பெற்றோரிடம் தந்து, குழந்​தைகளுக்கு பாடம் சொல்லித்தர துவங்​கினோம்.


பின்பு அதை தாய்த்​தமிழ் கல்விப்பணி அறக்கட்​டளையாக மாற்றி, அதே பகுதியில் 10 சென்ட் நிலம் வாங்கி கூரை கட்டிடத்தில் தாய்த்​தமிழ் பள்ளியை தொடங்​கினோம். இதையடுத்து தமிழகம் முழுவதும் தாய்த்​தமிழ் பள்ளிகள் தன்னெழுச்​சியாக பூத்தன. பிள்ளையார் சுழிபோட்ட அம்பத்தூர் பள்ளி​யானது இப்போது 5-ம் வகுப்பு வரை செயல்​படு​கிறது.


திண்டிவனம் ரோசனையில் பேராசிரியர் கல்விமணி, நடுநிலைப் பள்ளியை இன்றைக்கும் சிறப்பாக நடத்தி வருகி​றார். திருப்பூர் வள்ளலார் நகர், பாண்டியன் நகர், பல்லடம் ஆகிய இடங்களில் துவக்​கப்​பள்​ளிகள், பல்லடம் சிங்க​னூரில் உயர்நிலைப்​பள்ளி, பொள்ளாச்சி கள்ளிப்​பாளை​யத்தில் தாய்த்​தமிழ்ப்​பள்ளி என தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட தாய்த்​தமிழ்ப் பள்ளிகள் உருவாகின.


அரசுப் பள்ளி​களிலேயே இன்றைக்கு ஆங்கிவழிக் கல்வி வந்து​விட்​ட​தால், தாய்த்​தமிழ்ப் பள்ளிகளை நடத்துவது பெரும்​பாடாக இருக்​கிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி​களில் 43 லட்சம் குழந்​தைகளும், சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளி​களில் 65 லட்சம் குழந்​தைகளும் படிக்​கின்​றனர்.


ஆனால், தாய்த்​தமிழ் பள்ளியில் ஆயிரக் கணக்கில் மட்டுமே குழந்​தைகள் படிக்​கின்​றனர். 2006 திமுக ஆட்சியின் போது சென்னை மேயராக இருந்த மா.சுப்​பிரமணியன், சென்னையில் 25 மாநகராட்சி பள்ளி​களில் ஆங்கில வழியை கொண்டு​வந்​தார். அவரைத் தொடர்ந்து ஜெயலலிதா தனது ஆட்சியில் அரசுப் பள்ளி​களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதாகக் கூறி ஆங்கில வழிக் கல்வியை அனைத்துப் பள்ளி​களுக்கும் விரிவுபடுத்​தி​னார்.


தாய்த்​தமிழ்ப் பள்ளி​களில் வகுப்​புக்கு ஓர் ஆசிரியர் கட்டாயம் இருப்​பார். ப்ரிகேஜியை அரும்​புகள் என்றும், எல்கேஜியை பூக்கள், என்றும் யூகேஜியை பிஞ்சுகள் என்றும் பிரித்து சொல்லித் தருகி​றோம். ஆசிரியர்களை அத்தை, அக்கா, அம்மா, அண்ணா என்று அழைக்க வைக்கி​றோம். குழந்​தைகளுக்கு பயம் இல்லாத சூழலில் அனைத்​தையும் தமிழ்​வழியில் சொல்லித்​தரு​கி​றோம். ஆங்கிலம் ஒரு பாடம் மட்டுமே. மற்றவை அனைத்தும் தமிழில் தான். அரும்​புகள் துவங்கி 10-ம் வகுப்பு வரை அது தான் நடைமுறை.


குழந்​தைகள் வீட்டில் இருந்து படிப்பது போன்ற சூழ்நிலை​யைத்தான் தாய்த்​தமிழ் பள்ளி​களில் உருவாக்கி உள்ளோம். தாய்மொழி துவக்கக் கல்வியே பலரையும் மகத்தான​வர்களாக உருவாக்​கி​யிருப்​ப​தால், தொடர்ந்து தாய்மொழி பள்ளி​களின் தேவைகளை அரசும் புரிந்​து​கொள்ள வேண்டும். இந்தப் பள்ளி​களில் படித்த பலரும் நகராட்சி ஆணையர்​களாகவும் தலைமைச் செயலகத்தில் பல்வேறு உயர் பதவிகளிலும் உள்ளனர்.


இன்றைக்கு உள்ள சூழ்நிலையில் தாய்த்​தமிழ் பள்ளிகளை நடத்துவது பெரும் சவாலாக உள்ளது. ஆசிரியர்​களுக்கு அரசு சம்பளம் வழங்க வேண்டும், இந்தப் பள்ளிகளை அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்​கைகளை அரசுக்கு முன்வைத்​திருக்​கி​றோம். அரசுப்​பள்​ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்கிறது அரசு. ஆனால், எங்களுக்கு புத்தகப்பை, காலணிகள், புத்தகங்கள், குறிப்பேடு ஆகியவற்றை மட்டுமே அரசு வழங்கு​கிறது.


இந்த நிலை மாற வேண்டும். உயர் கல்வி தொடங்கி மத்திய - மாநில அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வரை தமிழ்​வழியில் படித்​தவர்​களுக்கு முன்னுரிமை தர வேண்டும். தாய்மொழிக்​கென்று நடத்தும் இந்தப் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையில், காலை உணவு மற்றும் மதிய உணவு திட்டங்களை இந்தப் பள்ளி மாணவர்​களுக்கும் வழங்கிட வேண்டும்” என்றார்.கல்விக்காக ஆண்டுக்கு சுமார் 49 ஆயிரம் கோடியை ஒதுக்கும் தமிழக அரசு, தாய்த்​தமிழ்ப் பள்ளிகளை பாதுகாத்துப் போற்றி ஊக்குவிக்​கவும் உரிய முன்னெடுப்​புகளை செய்ய வேண்டிய நேரமிது!

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.