மாநிலத்தில் தொடக்க கல்வியில் ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதால் அப்பள்ளிகளை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறதா என ஆசிரியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு வழங்கும் நலத்திட்டங்களால் கல்வி தரம் உயர்ந்து, ஆரம்ப பள்ளிகளில் இந்தாண்டு 3.12 லட்சம் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மழலையர் வகுப்புகளில் 22,757 குழந்தைகள் சேர்ந்துள்ளனர் என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார். அதேநேரம் பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு தொடக்க பள்ளிகளில் இன்னும் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
கொடைக்கானலில் சமீபத்தில் நடந்த தொடக்க கல்வி அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டம் வாரியாக ஒற்றை இலக்க மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி விபரங்களை சேகரிக்கும்படி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் விபர பட்டியல், ஆசிரியர்கள் வாட்ஸாப் குழுக்களில் பரவி வருகிறது. இது ஆசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் ஒற்றை இலக்க மாணவர் பள்ளிகளை, அருகே உள்ள அரசு பள்ளிகளுடன் இணைக்கும் முயற்சி நடந்தது. அதற்கு அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் மூடுவிழா கைவிடப்பட்டது. தற்போது அதுபோல் பள்ளிகளை கணக்கெடுக்க உத்தரவிட்டதன் வாயிலாக, அதிகாரிகள் பரிந்துரையால் ஒற்றை இலக்க மாணவர் அரசு பள்ளிகளை மூடும் முயற்சி நடக்கிறதா என சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் எங்கு பேசினாலும், கல்வியும், சுகாதாரமும் தி.மு.க., ஆட்சியின் இரு கண்கள்' என்கிறார். அமைச்சர் மகேஷ், அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல; பெருமையின் அடையாளம்' என்கிறார். அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்களை அரசு வெளியிடுகிறது.
ஆனால் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கம் கொண்ட பள்ளிகள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இப்பள்ளிகளில் மாணவர் பள்ளிகளில் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகளின் தவறான ஆலோசனைகளால் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தினால் எதிர்ப்பு கிளம்பும் என்பதில் மாற்றம் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.