தமிழ்நாட்டில் 2025 - 26 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2025-26
தமிழ்நாட்டில் இந்த கல்வி ஆண்டு முதல் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை 2025-ன் அடிப்படையில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைமுறையில் இருந்த பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 2017-18 கல்வி ஆண்டிற்கு முன்னர் நடைமுறையில் இருந்தப்படியே தேர்வு நடத்திடவும் அனுமதி அளிக்கப்பட்டது. மதிப்பெண் சான்றிதழ்களும் அதன் அடிப்படையில் வழங்க அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுத்தேர்வு அட்டவணை 2025-26
இதனைத் தொடர்ந்து, இந்த கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த மாதம் அட்டவணை வெளியாகும் என மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தனர்.
தயாரிப்பு பணியில் தாமதம்
அக்டோபர் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம், பருவ மழை, தீபாவளி பண்டிகை விடுமுறை ஆகியவை தொடர் நிகழ்வுகளாக நடைபெற்றது. அட்டவணை தயாரிப்பதில் பணிகள் தாமதம் ஏற்பட்டதால் இந்த மாதம் வெளியிட முடியாத சூழல் நிலவியது. தொடர்ந்து, பொதுத்தேர்வு அட்டவணை பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும், நவம்பர் மாதம் வெளியிடப்படலாம் என தகவல் வெளியானது.
நவம்பர் 4-ம் தேதி வெளியீடு
இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 25) செய்தியாளர்கள் சந்திப்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டு, பின்னர் அட்டவணை வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பணி
தமிழ்நாட்டிற்கு அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தோராயமாக மே மாதம் தேர்தல் நடைபெறும் என கருதப்படுகிறது. அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேர்தல் பணிகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் தேதிகளை அறிந்துகொண்டு அதற்காக திட்டமிட ஆர்வமாக காத்துக்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.