தமிழ்நாட்டில் அரசு பணிகளில் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீட்டிற்கு புதியதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற சட்டமுன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இனி அரசு வேலைக்கு புதிதாக விண்ணப்பிக்கு நபர்கள் மட்டுமே இந்த இடஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்படும் என வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் அரசு பணிகளில் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் நேரடி நியமனத்திற்கான காலிப்பணியிடங்களில் 100க்கு 20 சதவிகிதம் பணியிடங்கள் தமிழ் வழிக் கல்விக்கு பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
இதனால், தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிக்கப்படுவது சட்டப்பூர்வமானது. இந்த சட்டத்திற்கு இளைஞர்களிடையே பெருமளவு வரவேற்பு இருந்தது. இருப்பினும், தமிழ் வழிக் கல்வி என்பது எதுவரையிலும் என்ற உரிய வழிமுறை தேவைப்பட்டது. அதாவது, ஒரு பணிக்கான கல்வித்தகுதி 12-ம் வகுப்பு என்று இருப்பின், ஒருவர் எதுவரையில் தமிழ் வழிக் கல்வி படித்திருந்தால், இந்த ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெறலாம் என்ற வழிவகையை தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டமாக ஆலோசித்து, 2020-ம் ஆண்டு இச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
பணிக்கான கல்வித்தகுதி வரை தமிழ் வழிக் கல்வி அவசியம்
2020-ம் ஆண்டு தமிழ் வழிக் கல்வித் திருத்தச் சட்டத்தின்படி, அரசு பதவிகளில் அந்த பதவிக்காக கோரப்பட்ட கல்வித்தகுதி வரை, ஒருவர் தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டது. அதாவது, ஒரு பதவிக்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு என்றால், 1 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் பயின்று இருக்க வேண்டும்.
பட்டப்படிப்பு என்றால் அதன்படி, பட்டப்படிப்பு வரை தமிழ் வழிக் கல்வியில் படித்திருக்க வேண்டும் என கொண்டுவரப்பட்டது. விண்ணப்பதார்கள் அப்பதவிக்கான கல்வித்தகுதியை தமிழ் வழியில் படித்தவரா என்பதற்கான சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இதனை தேர்வு முகமைகள் அனைத்துக் கட்டத்திலும் துறை ரீதியாக சரிபார்க்கவும் அறிவுத்தப்பட்டது.
2021-ம் ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின் அடிப்படையில் இதற்கான வழிமுறைகள் மற்றும் யாரெல்லாம் இந்த இடஒதுக்கீட்டிற்கு தகுதி ஆனாவர்கள் என்ற வழிமுறை வெளியிடப்பட்டது.
முக்கிய வழிமுறைகள் வெளியீடு
அதன்படி, இதர மொழிகளில் படித்து தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், 1 முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுதியவர்கள், பிற மாநிலத்தில் வேறு மொழியில் படித்து, தமிழ்நாட்டில் சேரும் வகுப்பில் இருந்து தமிழ் வழியில் படித்தவர்கள் ஆகியவர்கள் தகுதியானவர்கள் அல்லர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான சான்றிதழைப் பெற தேவையான வழிமுறையையும் அரசாணையில் வெளியானது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய ஆணை
இதனைத்தொடர்ந்து, 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற தமிழ் வழிக் கல்வி தொடர்பான வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதில் மூன்றாம் வகுப்பில் சேர்ந்து தொடர்ந்து தமிழ் வழியில் படித்தவருக்கு தேர்விற்கு அனுமதி அளிக்கப்பட்டதுடன், நிலவொளிப் பள்ளியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க சிறப்பு நிகழ்வாகக் கருதலாம் என ஆணையிடப்பட்டது.
இதனடிப்படையிலும், பல்வேறு தேர்வர்களின் கோரிக்கைகளுக்கு உட்பட்டு, தமிழ்நாடு அரசு 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு அரசாணை வெளியிட்டது.
முக்கிய மாற்றங்கள் அறிவிப்பு
பதவிக்கான உரிய கல்வித்தகுதியை முழுமையாக தமிழ் வழியில் பயின்று இருக்க வேண்டும்.
1-ம் வகுப்பில் பள்ளியில் சேராமல் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் 2 அல்லது 8-ம் வகுப்பில் பள்ளிகளில் சேர்ந்து தமிழ் வழியில் பயின்றவர்கள் மற்றும் வேறு மாநிலத்தில் தமிழ் மொழியில் படித்து, தமிழ்நாட்டில் பள்ளியில் சேர்ந்து முழுமையாக தமிழ் வழியில் படித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
பள்ளிக்கு செல்லாமல், நேரடியாக தனித்தேர்வர்களாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்கள் அல்லர்.
பள்ளியில் படித்து பொதுத்தேர்வை எழுதி, அதில் தேர்ச்சி பெறாத பாடத்தை மட்டும், தனித்தேர்வர்களாக எழுதி பின்னர் கல்லூரிகளிலும் தமிழ் வழியில் படித்தவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள்.
20 சதவீத ஒதுக்கீடு என்பது ஒவ்வொரு தெரிவு நிலையிலும் பதவி வாரியாக பின்பற்றப்படும்.
சட்டமுன்வடிவு நிறைவேற்றம்
இந்நிலையில், இன்று (ஜனவரி 23) தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டும் தமிழ் வழிக் கல்வி இடஒதுக்கீட்டில் முன்னுரிமை வழங்கப்படும் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து, இந்த சட்டமுன்வடிவிற்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2010 முதல் தற்போது வரை இந்த ஒதுக்கீட்டில் முன்னுரிமை பெற்றவர்களின் பணி நியமனங்கள் செல்லுபடியாகும் எனவும், ஏற்கெனவே அரசுப் பணியில் இருப்பவர்கள் குறிப்பிட்ட காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே முன்னுரிமை பெற விண்ணப்பிக்க வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.