ஒரு ஆண்டில் 12 மாதங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் ஒரு
காலத்தில் ஒரு ஆண்டில் பத்து மாதங்கள் மட்டுமே இருந்தன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் பின்னால் சேர்க்கப்பட்டவை.
எங்களுக்கும் காலம் வரும் என்று சொல்வார்கள். ஆனால் அதிகார பலம் யாரிடம் இருக்கிறதோ அவர்களால் காலத்தையே மாற்றி அமைக்க முடிகிறது. அப்படித்தான் ஜூலையும் ஆகஸ்டும் பிறந்தன.
கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமப் பேரரசு (Roman Empire) மாபெரும் அரசாக உருவெடுத்தது. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரவியிருந்த சாம்ராஜ்யம் இது. 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரோமக் குடியரசை (கிமு 510 – கிமு 1ம் நூற்றாண்டு) அடுத்து ரோமப் பேரரசு ஆட்சிக்கு வந்தது. குடியரசில் இருந்து பேரரசாக மாறிய காலகட்டத்தைப் பற்றி ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை. ஐரோப்பாவிலும் மத்தியதரைக் கடல் பகுதியிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பு இந்த அரசின் கீழ் இருந்தது. பல நூற்றாண்டுகள் இந்தப் பேரரசின் ஆட்சி நீடித்து நின்றது. மொழி, சமயம், கட்டடக் கலை, மெய்யியல், சட்டம், அரசு நிர்வாகம் ஆகிய துறைகளில் இந்தப் பேரரசு சிறந்து விளங்கியது. இவற்றின் சிறப்புகள் இன்றுவரை பேசப்பட்டுவருகின்றன.
இந்தப் பேரரசின் மன்னனாக கி.மு 44இல் ஜூலியஸ் சீசர் முடிசூடினார். இவர் உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் ஒருவர். ரோமர்களின் நாட்டை ரோமானியப் பேரரசாக மாற்றியமைத்ததில் இவரது பங்கு மிக முக்கியமானது.
தற்போது நாம் பயன்படுத்தும் ஆங்கில கேலண்டரை கிரிகோரியன் காலண்டர் என்று சொல்வார்கள். இந்த கேலண்டர் உருவாவதற்கு முன்பு ரோமானியர்களின் ஜூலியன் கேலண்டர்தான் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளை அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவர் 1582ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த கிரிகோரியின் ஆணைப்படி இந்தத் திருத்தங்கள் செய்யப்பட்டதால் இந்தக் காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்னும் பெயர் பெற்றது.
இந்த கிரிகோரியன் கேலண்டரின்படி, ஜூலை மாதம் ஏழாம் மாதம் என்பது நமக்குத் தெரியும். இதற்கு ஜூலை என்ற பெயர் வந்ததற்குக் காரணமே ஜூலியஸ் சீசர்தான். முன்பெல்லாம் ஆண்டுக்கு 10 மாதங்கள். ஒவ்வொரு மாதத்துக்கும் சுமார் 36 நாட்கள். ரோமானியக் காலண்டரில் ‘கிவின்டிலிஸ்’ (ஐந்தாவது ) என்ற பெயரில் இருந்த மாதத்திற்கு 31 நாட்கள் என்று ஜூலியஸ் சீஸர் கி.மு. 46இல் நிர்ணயம் செய்தார். இந்த மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார் என்பதால், அவரை கவுரவிக்கும் விதமாக இதற்கு ரோமானிய செனட் உறுப்பினர்கள் இந்த மாதத்துக்கு ‘ஜூலியஸ்’ என்று பெயரிட்டனர். அதுவே நாளடைவில் ஜூலை என்று ஆனது.
அதுவரை ஏழாம் மாதமாக இருந்த செப்டம் (இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப் பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது) அதன் பிறகு எட்டாவது மாதமாகியது.
ஜூலியஸ் சீசருக்குப் பிறகு வந்தவர்களில் அகஸ்டஸ் சீசர் மிகவும் புகழ் பெற்றவர். ரோமானியப் பேரரசைப் பரந்து விரிந்த சாம்ராஜ்யமாக நிறுவியவர் இவர். உலக வரலாற்றில்லேயே மிகவும் புகழ்பெற்ற மன்னர்களில் ஒருவர். இவரை அக்டேவியஸ் என்றும் அழைப்பார்கள். கி.மு. முதல் நூற்றாண்டில் ரோமானியக் குடியரசைச் சீர்குலைத்த உள்நாட்டுப் போர்களை இவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்.
ஆட்சியைப் பிடிப்பதற்கான போராட்டத்தில் அக்டேவியஸ் ஈவிரக்கமின்றி நடந்து கொண்டபோதிலும், அவர் தமது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு, மிகவும் கனிவுடன் செயல்பட்டார். அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் சென்றார்.
உலக வரலாற்றில் இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகாரிக்கு அகஸ்டஸ் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார். தேர்ந்த அரசியல் மேதையாகவும் அவர் திகழ்ந்தார். அவரது சமரசக் கொள்கைகள், ரோமானிய உள்நாட்டுப் போர்களினால் விளைந்த பெரும் பிளவுகளை நீக்குவதற்கு உதவின. ரோமானியப் பேரரசை நாற்பதாண்டுகளுக்கு மேல் அகஸ்டஸ் ஆண்டார்.
கி.மு. 30 முதல், அகஸ்டஸ் ஆட்சியில் ரோமானியப் பேரரசில் உள்நாட்டு அமைதி நிலவியது. இதனால், நாட்டின் செல்வமும், வளமும் செழித்தோங்கின. கலைகள் வளர்ந்தன. அகஸ்டஸ் காலம் ரோமானிய இலக்கியத்தில் பொற்காலமாக விளங்கியது.
பண்டைய ரோமானிய காலண்டரின்படி லத்தீன் மொழியில் ஆறாவது மாதத்துக்கு ‘ஸெக்டிலஸ்’ என்று பெயர். இதன் பொருள் ஆறாவது என்பதாகும். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஏற்கனவே இருந்த பத்து மாதங்களுடன் ஜூலையும் ஆகஸ்டும் சேர, 12 மாதங்களாயின. மாதத்துக்கு 30 அல்லது 31 நாட்கள் என்ற கணக்கும் இதன் பிறகு உருவாயிற்று. அதன் பிறகுதான் செப்டம் என்ற மாதம் ஒன்பதாம் மாதமானது.
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பண்டைய தமிழ்ப் பாடலில் வரும் ஒரு வரி. மன்னன் மிகவும் சக்தி படைத்தவனாக இருந்தால் மக்கள் மட்டுமல்ல, காலமும் கேலண்டரும்கூட அவன் சொல்படி கேட்கும்!
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.