காஞ்சிபுரம் நகராட்சிப் பள்ளியில் மாணவனை வகுப்பறையில்
வைத்து பூட்டிவிட்டு ஆசிரியர்கள் வீட்டுக்குச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் நகராட்சி, ரங்கசாமிகுளம் அருகே காந்திசாலை நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்திலேயே அங்கன்வாடி மையமும் உள்ளது.
இந்தப் பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் வரை படித்து வருகின்றனர். மாலை 4 மணிக்கு, பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் 4-ஆம் வகுப்புப் பயிலும் ஹரீப் சுல்தானின் மகன் அப்துல்லா உமர், மாலை 5 மணிவரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அந்த மாணவனின் தாயார் பதூர் நிஷா, பள்ளிக்குச் சென்று தனது மகனைத் தேடியுள்ளார். அப்போது, அனைத்து வகுப்பறைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இதனால், பள்ளி வளாக வாயில் கதவு மூடப்படவில்லை. இதனைத்தொடர்ந்து, உள்ளே சென்ற பதூர் நிஷா, தனது மகனின் பெயரைச் சொல்லி அழைத்துள்ளார். அப்போது, பூட்டப்பட்ட வகுப்பறையில் இருந்து மாணவன் அப்துல்லா உமர் பதிலளித்தார்.
இதையடுத்து, அங்கன்வாடி மையப் பொறுப்பாளர்கள் உதவியுடன் மாணவர் மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள், அங்கு திரண்டனர். ஆசிரியர்களின் அலட்சியத்தால், மாணவரை வகுப்பறையிலேயே பூட்டிவிட்டுச் சென்றது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி கூறுகையில், "மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பாக ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் கவனக்குறைவால் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும்' என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.