அடுத்த கல்வி ஆண்டு முதல்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் புதிய நடைமுறை
12-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்
ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கையில் அடுத்த ஆண்டு முதல் 12-ம் வகுப்பு மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும் புதிய நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது என்று மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அசோக் தாகூர் தெரிவித்தார்.
சென்னை ஐ.ஐ.டி.யில் கூட்டம்
சென்னை ஐ.ஐ.டி.யில் (இந்திய தொழில்நுட்ப கழக வளாகத்தில்) மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சசரும், இந்திய தொழில் நுட்ப கழகத்தின் தலைவருமான ஸ்மிருதிராணி தலைமையில் அச்சபையின் 48-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் அசோக் தாகூர் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்து ஐ.ஐ.டி. தலைவர்கள் கலந்து கொண்டனர். ஐ.ஐ.டி.களை மேம்படுத்துவது குறித்து கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டன.
பிறகு மத்திய உயர்கல்வித்துறையின் செயலாளர் அசோக் தாகூர் கூறியதாவது:-
தற்பொழுது உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசையை அளவிடுவதற்கும், அதனை கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு வரும் டிசம்பர் மாதத்திற்குள் இதற்கான உத்தேச வரைமுறைகள் வகுத்து அளிக்கும். முழுமையான வரைமுறைகள் மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்பட்டு மத்திய பல்கலைக் கழகத்திடம் அளிக்கப்படும். இதன் அடிப்படையில் இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் தர வரிசைப்படுத்தபடும்.
ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கு மாணவர்கள் ஜெ.இ.இ. என்ற நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு தரப்பிலான மாணவர்கள் சிறப்பு வகுப்பிற்கு சென்று இதில் அதிக மதிப்பெண்களை பெறுகின்றனர்.
புதிய நடைமுறை
தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஐ.ஐ.டி.யில் அதிகம் பேர் சேர முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். இதே போல பல மாநில மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த பிரச்சினை குறித்து சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கான புதிய நடைமுறை குறித்து முடிவு இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அதாவது ஐ.ஐ.டி.யில் சேர நுழைவுத் தேர்வுகளில் அவர்கள் தேர்ச்சி பெறவேண்டும். மேலும் அந்த மாணவர்கள் பொதுப்பிரிவினர் அல்லது பிற்பட்டவகுப்பை சார்ந்தவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் 75 சதவீத மதிப்பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் குறைந்த பட்சம் 70 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருந்தால் ஐ.ஐ.டி.யில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு அழைக்க தகுதி உள்ளவர்கள்.
அவர்கள் நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் 12-வது வகுப்பில் எடுத்த மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஐ.ஐ.டி.யில் சேர்க்கப்படுவார்கள்.
அடுத்த கல்வி ஆண்டில் நடைமுறை
இந்த புதிய நடைமுறை 2015-2016 கல்வி ஆண்டில் அமல்படுத்தப்படும்.
இவ்வாறு அசோக் தாகூர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.