பார்வையற்ற ஆங்கிலப் பேராசிரியரை வேறு கல்லூரிக்குப் பணியிட மாற்றம்
செய்து, புதுச்சேரி உயர் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி, வில்லனூர் கிராமத்தில் உள்ள கஸ்தூர்பா மகளிர் கல்லூரியில் ஆங்கிலத் துறை தலைவராக டி.ராம்குமார் பணியாற்றினார். இவர் முற்றிலும் பார்வையற்றவர். ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.
கல்லூரி அமைந்துள்ள பகுதியிலிருந்து 9 கி.மீ. தூரத்தில் ராம்குமாரின் வீடு உள்ளது. அங்கிருந்து அவருடன் பணிபுரிபவர்களுடன் கல்லூரிக்கு வந்து செல்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 25-ஆம் தேதி, 18 கி.மீ. தூரத்தில் உள்ள தவளக்குப்பம் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி கலை, அறிவியல் கல்லூரிக்கு ராம்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பார்வையற்றவர்களை வீட்டுக்கு அருகில் உள்ள அலுவலங்களில் பணி நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, என்னை வேறு இடத்துக்கு மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என உயர் கல்விக்கான சங்கத் தலைவரிடம் ராம்குமார் முறையிட்டார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பணியிட மாற்றத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ராம்குமார் வழக்கு தொடர்ந்தார்.
அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ராம் குமார் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர். பிரசாத் ஆஜரானார்.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரருக்கு எதிராக பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு எதிரானது. மாற்றுத் திறனாளிகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.
பார்வையற்றோரை அவர்கள் வசிப்பிடத்துக்கு அருகில் பணி நியமனம் செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுதாரரைப் பணியிட மாற்றம் செய்ததற்கு, அவர் பணிபுரியும் கல்லூரி மகளிர் கல்லூரி என காரணம் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அந்தக் கல்லூரியில் மேலும் 6 ஆண்கள் பணி புரிகின்றனர்.
அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, மனுதாரரைப் பணியிட மாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. தனி நீதிபதியின் உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.