WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, December 21, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்:தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்ப, அதிக அளவில் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், கீழப்பாவூரைச் சேர்ந்த, எம்.சித்ரா என்பவர், தாக்கல் செய்த மனு:கீழப்பாவூர் அருகில் உள்ள மடத்துாரில், இந்து நடுநிலைப் பள்ளி உள்ளது. இது, அரசு உதவி பெறும் பள்ளி. கடந்த, 2012 ஏப்ரலில், ஆசிரியராக நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறேன்.

ஆசிரியர் தகுதி தேர்வில் நான் தேர்ச்சி பெறாததால், என் நியமனத்துக்கு, அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. எனவே, சம்பளம் இல்லாமல் பணியாற்றி வருகிறேன்.இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதால், 2010, ஆகஸ்ட் 23ம் தேதிக்குப் பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டது.ஆசிரியர் நியமனத்துக்கு, குறைந்தபட்ச தகுதியாக, தகுதி தேர்வு தேர்ச்சி என, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழு, நிர்ணயித்துள்ளது. கட்டாய கல்வி சட்டம் அமலுக்கு வந்து, 5 ஆண்டுகளுக்குள், இந்த தகுதியை பெற வேண்டும்.

எனவே, 5 ஆண்டுகளுக்குள், ஆசிரியர் தகுதி தேர்வில், நான் தேர்ச்சி பெற வேண்டும். அப்போது தான், என் நியமனத்துக்கு, அரசு ஒப்புதல் வழங்கும். ஐந்து ஆண்டுகளுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், என் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதேபோன்று, திண்டிவனத்தில், எம்.டி.கிரேன் நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் நாகராஜன் என்பவரும், பணி நியமனத்துக்கு ஒப்புதல் கோரி, மனுத் தாக்கல் செய்தார்.இம்மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:

ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, அந்த காலியிடத்தில், மனுதாரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, கல்வி தகுதி உள்ளது; ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவில்லை.அதனால், அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. சம்பளமும் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு, ஏப்ரலில், விரிவான உத்தரவு ஒன்று பிறப்பித்திருந்தேன்.அரசு உதவி பெறும் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு (ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள்), ஐந்து ஆண்டுகளுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், ஐந்து ஆண்டுகளுக்குள், அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அப்போது இல்லாததாலும், தகுதி பெற்றவர்கள், அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்டதாலும், அதை கவனத்தில் கொண்டு, அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், ஒருமுறை தான், தகுதி தேர்வு நடந்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில், ஆசிரியர்கள் தேவை அதிகம் உள்ளது. எனவே, எவ்வளவு எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு நடத்த வேண்டும். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத போது, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களை, உதவி பெறும் பள்ளிகளில் நியமிப்பதை தவிர, வேறு வழியில்லை.

ஆறு வாரங்களுக்குள், மனுதாரர்களுக்கு, தற்காலிக ஒப்புதல் வழங்க, தொடக்க கல்வி இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது. பணியில் நியமிக்கப்பட்ட தேதியில் இருந்து, ஐந்து ஆண்டுகளுக்குள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இல்லையென்றால், வேலையை விட்டு தானாக போய் விடுவர்.அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் உள்ள, காலியிடங்களை நிரப்ப ஏதுவாக, ஒரு ஆண்டில், எந்த எண்ணிக்கையில் தகுதி தேர்வு நடத்த முடியுமோ, அந்த அளவுக்கு நடத்த வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.