WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 26, 2017

மேல்நிலைக் கல்வி மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை அமல்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் சேர்க்கையில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு 1990-ல் பிறப்பித்த அரசாணையை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ரத்தினபுரத்தைச் சேர்ந்த டி.ஆரோக்கியம், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:


தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் சேர்க்கையில், குறிப்பாக கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு 18 சதவீதம், பழங்குடியின பிரிவு மாணவர்களுக்கு ஒரு சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என 1990-ம் ஆண்டில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அரசாணை அமல்படுத்தப்படவில்லை.

இதனால் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தாலும், ஆதி திராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு கணிதம், அறிவியல் பாடப்பிரிவில் சீட் கிடைக்காத நிலை உள்ளது.

மேல்நிலைக் கல்வியில் முதல் பிரிவு (கணிதம், அறிவியல், கணினி அறிவியல்) பயிலும் மாணவர்கள் மட்டுமே பொறியியல் படிப்பில் சேர முடிகிறது. அதே நேரத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு முதல் பிரிவில் பயிலும் வாய்ப்பு கிடைப்பதில்லை. எனவே, இடஒதுக்கீடு வழங்கும் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தவிர்த்து பிற கல்வி நிறுவனங்களில் மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

மனுதார் வழக்கறிஞர் அழகுமணி, ‘அரசாணைப்படி, சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு கூடாது’ என்றார்.

இதையடுத்து மேல்நிலைக் கல்வியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 1990-ல் பிறப்பித்த அரசாணையை தமிழக அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.