“புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, 2,500 தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன,” என, தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர், பாண்டியராஜன் தெரிவித்தார்.
திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீநிகேதன் பள்ளி, டென்மார்க்கில் உள்ள பள்ளியுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, டென்மார்க் நாட்டை சேர்ந்த, 13 மாணவ, மாணவியர், மூன்று ஆசிரியர்கள், கல்வி மற்றும் கலாசார பரிமாற்ற சுற்றுப்பயணமாக, கடந்த வாரம் சென்னை வந்தனர்.
அவர்கள், புதுச்சேரி, மாமல்லபுரம் போன்ற இடங்களை பார்வையிட்டனர். அரசு பள்ளிகளுக்கு சென்று, அங்கு நடக்கும் வகுப்புகளை பார்வையிட்டனர். மாணவ, மாணவியருக்கு, திருக்குறள் வகுப்புகள் நடத்தப்பட்டன. நேற்று, சென்னை, தலைமை செயலகத்தில், அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்தனர். அப்போது அவர்கள், திருக்குறள் ஒப்புவித்து அசத்தினர். அவர்களுக்கு, ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள் நூலை, அமைச்சர் வழங்கி பாராட்டினார்.
பின், அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: அமெரிக்காவில் உள்ள, ஹார்வர்டு பல்கலையில், தமிழ் இருக்கை அமைய, 40 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். தமிழக அரசு, 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது. அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில், 6,800 பேர், நிதி அளித்துள்ளனர். இதுவரை, 36 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
தமிழகத்தில், தனி கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களில், 82 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. மீதித் தொகை, இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கிடைக்கும் என, நம்புகிறோம். நிதி தர விரும்புவோர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் கணக்கிலும் செலுத்தலாம். ஹார்வர்டில் அமைய உள்ள தமிழ் இருக்கைக்கு, பேராசிரியராக சிங்கப்பூர் தமிழர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும், பல்வேறு பல்கலைகளில் நடைபெறும், தமிழ் ஆராய்ச்சிகள் குறித்து அறிய, ஆராய்ச்சி நுழைவாயில் அமைக்க, தமிழ் வளர்ச்சி துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில், அதற்கான இணையதளம் துவக்கப்படும். திருநெல்வேலி மாவட்டம், ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி ஆய்வு முடிவுகள், மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில், அந்த ஆய்வு முடிவுகள் பெறப்படும். பின், தொல்லியல் துறைக்காக, புதிய இணையதளம் தொடங்கப்பட்டு, அவை வெளியிடப்படும். தற்போது உருவாக்கப்பட்டுள்ள, 2,500 புதிய தமிழ் வார்த்தைகள், அரசாணையாக வெளியிடப்பட உள்ளன. ஆதிமனிதன் வாழ்ந்ததாக கூறப்படும், திருவள்ளூர் மாவட்டம், பட்டறை பெரும்புதூரில் அகழாய்வு நடத்த, மத்திய அரசின் அனுமதி கோரி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.