இரண்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கொடுக்கக் கூடாது என்பன உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்ய, அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக மத்திய அரசின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வழக்குரைஞர் புருஷோத்தமன் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு என்சிஇஆர்டி விதிகளை மீறி 8 பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. மேலும் 1, 2 -ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தனியாரிடமிருந்து புத்தகங்களை வாங்க வேண்டும் என்பதற்காக தனியார் பள்ளிகள் குழந்தைகளிடம் இந்த பாடங்களை திணித்து வருகின்றனர். அதிகமான சுமையைச் சுமக்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே, என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஎஸ்இ தரப்பில், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் வழங்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை அனைத்து மாநில செய்தித்தாள்களிலும் விளம்பரமாக வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பின்பற்றி தெலங்கானா, மகராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளன.
மேலும் சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஇஆர்டி பரிந்துரைத்த புத்தகங்களைக் கொண்டு பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகிறதா என திடீர் ஆய்வு மேற்கொள்ளவும், இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப் பாடம் வழங்கக்கூடாது என்ற உத்தரவை பின்பற்றாத பள்ளிகளின் உரிமத்தை ரத்து செய்யவும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத மாநில அரசுகளின் பள்ளிக் கல்வித் துறை செயலாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்து, விசாரணையை வரும் 24 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.