WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 5, 2025

மத்திய அரசு நிதி விடுவிப்பு: தனியார் பள்ளிகளில் மீண்டும் இலவச மாணவர் சேர்க்கை - பள்ளிக் கல்வித் துறை.

 

மத்திய அரசால் நிதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே சேர்க்கப்பட்டவர்களில் தகுதியான மாணவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டின்கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி(ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 8 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் சுமார் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

இதற்கிடையே தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக்கல்வித் துறை திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதில், ஆர்டிஇ திட்ட நிதியும் சுமார் ரூ.600 கோடி வரை வழங்கப்படவில்லை. இதன்காரணமாக நடப்பு கல்வியாண்டில் (2025-26) தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.

இதனால் பெற்றோர்கள் பலர் தங்களின் சொந்த செலவில் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடும் நிலை உருவானது. மேலும், ஏற்கெனவே சேர்க்கை பெற்ற குழந்தைகளை கல்விக் கட்டணம் செலுத்தவும் பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்த வழக்கில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு தனது பங்கு நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டுமென உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியது. தொடர்ந்து ஆர்டிஇ திட்டத்தின் தனது பங்களிப்பு நிதியை மத்திய அரசு சமீபத்தில் விடுவித்தது.

இதையடுத்து தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை ஆர்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தனியார் பள்ளிகளில் நடப்பு 2025–26-ம் கல்வியாண்டுக்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைகள் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும். ஏற்கெனவே சேர்க்கப்பட்ட மாணவர்களில் தகுதியானவர்களை அடையாளம் கண்டு ஆர்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் பள்ளியின் முதல்வர்கள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்களை தேர்வுசெய்ய வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் வரும் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். இடங்களைவிட விண்ணப்பங்கள் அதிகமானால் குலுக்கல் நடைமுறை பின்பற்றப்படும்.

அதேபோல், ஆர்டிகு தகுதியுடைய மாணவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கக்கூடாது. ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்தவகையில் பள்ளியின் நுழைவு வகுப்பில் இதுவரை சேர்க்கை பெற்ற குழந்கைளின் மொத்த எண்ணிக்கையை அக்டோபர் 7-ம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.

அதில் ஆர்டிஇ சேர்க்கைக்கு தகுதியான மாணவர்களின் சான்றுகளை அக்.9-ல் பதிவுசெய்ய வேண்டும். தொடர்ந்து தற்காலிக தகுதிப் பட்டியல் அக்டோபர் 10-ம் தேதியும், இறுதிப்பட்டியல் அக்.14-ம் தேதியும் வெளியிடப்படும். மேலும், இடங்களைவிட அதிக மாணவர்கள் இருப்பின் குலுக்கல் அக்டோபர் 16-ல் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.