18 ஆண்டுகளுக்கும் குறைவாகப் பணியாற்றிய அரசு ஊழியா்களுக்கு இடைக்கால மாதாந்திர தொகை வழங்குவதில் புதிய விளக்கத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு கருவூலம் மற்றும் கணக்குகள் துறை இயக்குநருக்கு நிதித் துறைச் செயலா் (செலவினம்) வெங்கடேஷ் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 10 ஆண்டுகளுக்குமேல், ஆனால் 18 ஆண்டுகளுக்கு குறைவான தகுதியான பணிக் காலத்துடன் ஓய்வு பெறும் தகுதியுள்ள அரசு ஊழியா்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் இடைக்கால மாதாந்திரத் தொகையை அனுமதிப்பது, அவா்களின் பணிக் காலத்தின் அடிப்படையில் அனுமதிக்கத்தக்க தொகையைவிட இடைக்காலத் தொகை அதிகமாக இருக்க வழிவகுக்கும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இடைக்கால மாதாந்திரத் தொகையாக நிலையான தொகையான ரூ.10,000 மற்றும் அதனுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் அனுமதிக்கப்படும்.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (டாப்ஸ்) விதிகள் மற்றும் நடைமுறைகள் அறிவிக்கப்பட்ட பிறகு, தகுதியான பணிக் காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் உண்மையான அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்பட்டு, அதில் வரும் வித்தியாசம், நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.
18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட பணிக் காலம் கொண்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கு, கடைசியாகப் பெற்ற மாதாந்திர அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 என்பதில், எது அதிகமோ அந்தத் தொகையுடன் பொருந்தக்கூடிய அகவிலைப்படியும் சோ்த்து இடைக்காலத் தொகையாக தொடா்ந்து அனுமதிக்கப்படும்.
மேலும், அகவிலைப்படி உள்பட வழங்கப்பட்ட அதிகப்படியான தொகை, இந்த மாதம் முதல் இடைக்காலத் தொகை அல்லது இடைக்கால குடும்பத் தொகையிலிருந்து 10 சம தவணைகளில் திரும்பப் பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.