WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, August 8, 2014

மதிப்பெண் சான்றிதழ் இல்லாமல் பி.எட் கவுன்சலிங்கில் அனுமதி மறுப்பு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் விளக்கம்

திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் பி.எட் கவுன்சலிங்கில்
அட்டஸ்டடு பெற்ற மதிப்பெண் சான்றிதழை அளிக்கலாம் என்றும், ஒரு வாரத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஒப்படைக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது என்றும் துணைவேந்தர் குணசேகரன் தெரிவித்தார். 

வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பருவத் தேர்வுகளில் இளநிலை மூன்றாம் ஆண்டு மாணவர்கள், முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. 

இந்த முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் காணப்பட்டன. இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிலும் அரசு கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும் பி.எட் கவுன்சலிங்கில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டது. இந்த பிரச்சினை காரணமாக நேரடியாக பல்கலைக்கு வந்த மாணவர்களுக்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கையொப்பமிட்ட மதிப்பெண் பட்டியல் வழங்கினார். 

இந்நிலையில், புதன்கிழமை பி.எட். கவுன்சலிங் சென்ற திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் மதிப்பெண் சான்றிதழ் முறையாக இல்லாத காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டதாக புகார் தெரிவித்தனர். 

தி இந்து ‘‘உங்கள் குரல்’’ பகுதியில் மாணவி ஒருவர் புதன்கிழமை புகார் பதிவு செய்திருந்தார். இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு இதுவரை 4 பருவத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 6-வது பருவ தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழ் வரவில்லை. முதுநிலை மாணவர்களுக்கு இதுவரை எந்த பருவ தேர்வுக்கும் மதிப்பெண் சான்றிதழ் வழங்கவில்லை. கிராமப்புற மாணவர்கள் படிக்கும் எங்கள் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைக்குமா? என்ற ஏக்கத்துடன் இருக்கின்றனர். திருவள்ளுவர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையால் அந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கவுன்சலிங் சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இதே சூழ்நிலைதான் அடுத்து வரும் நாட்களுக்கு நடக்கும் பி.எட் கவுன்சலிங்கில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் இதற்கு அவசரமாக தீர்வு காணவேண்டும்’’ என்று அரசு கல்லூரி பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார். 

இந்த குற்றச்சாட்டு குறித்து திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் குணசேகரனிடம் கேட்டபோது,‘‘மாணவர்களுக்கு 5-வது பருவத் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் அனைத்தும் அந்தந்த கல்லூரிக்கு அனுப்பிவிட்டோம். 6-ம் பருவத்திற்கான மதிப்பெண் பட்டியல் மட்டும் நிலுவையில் இருக்கிறது. அதையும் விரைவில் அளித்துவிடுவோம். பி.எட் கவுன்சலிங்கில் நமது பல்கலைக்கழக மாணவர்கள் 3 பேர் புதன்கிழமை வெற்றுத் தாளில் மதிப்பெண்கள எழுதி கல்லூரி முதல்வரிடம் அட்டஸ்டடு வாங்கிச் சென்றுள்ளனர். இதை கவுன்சலிங்கில் இருந்தவர்கள் ஏற்காமல் திருப்பி அனுப்பி உள்ளனர். 

மாணவர்கள் தங்களது இறுதிப் பருவ தேர்வு முடிவுகளை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து அரசுக் கல்லூரி மணவர்கள் என்றால் முதல்வரிடமும் தனியார் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலரிடமும் அட்டஸ்டடு பெற்றுச் செல்லலாம். திருவள்ளுவர் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழை ஒரு வாரம் கழித்து ஒப்படைக்கலாம். 

இது தொடர்பாக கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பேசி அனுமதி வாங்கிவிட்டேன்’’ என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.