அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும்
தமிழக அரசின் சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி வழக்கு
ஐகோர்ட்டு நோட்டீசு
சென்னை, அக்.28-
கடந்த 2009-ம் ஆண்டு அமலுக்கு வந்த அருந்ததியர் உள்ஒதுக்கீடு சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது.
சென்னை தம்புச்செட்டித் தெருவை சேர்ந்தவர் வக்கீல் ஜி.சரணவகுமார். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
உரிமைகள் பாதிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வருகிற நவம்பர் 1 மற்றும் 2-ந் தேதிகளில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கு தேர்வுகளை நடத்துகின்றன. இந்த தேர்வில் நான் கலந்துகொள்ள உள்ளேன். இந்த தேர்வுகளை நான் சிறப்பாக எழுதினாலும், அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு சட்டத்தின் காரணமாக, நான் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. அருந்ததியர் உள்ஒதுக்கீட்டு சட்டத்தினால், தாழ்த்தப்பட்டவர்களாகிய எங்களது உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தால் பாதிப்பு
தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வந்தது. இந்த உள்ஒதுக்கீடு சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 29-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டத்தினால், பெரும்பான்மையானவர்களான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அருந்ததியர் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்புக்கு எதிரானது
மேலும், தாழ்த்தப்பட்ட சாதிகளின் தொகுப்பு தொடர்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வரையறை செய்துள்ளது. இந்த சாதி தொகுப்பில் மாற்றம் செய்யவேண்டும் என்றால் பாராளுமன்றத்தில்தான் சட்டம் இயற்றவேண்டும்.
எனவே, அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்டம், அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நோட்டீசு
இந்த மனு நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.