WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, January 21, 2015

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னை: அரசுக்கு நோட்டீஸ்

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கும் வகையில் 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வி.மணிவாசகன் உள்பட ஆசிரியர்கள் வி.வரதன், பி.ராஜேந்திரன், ஜி.கே.ஐயப்பன் ஆகிய நான்கு பேர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:

தமிழ்நாடு பள்ளிகளில் ஆசிரியர்கள் மூன்று வகைகளில் பிரிக்கப்படுகின்றனர். அதில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பாடம் எடுப்பவர்கள்.

இவர்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் என்ற ஒரே ஒரு பதவி உயர்வு மட்டும்தான் பெறுவார்கள். இதுவும் பணி மூப்பு அடிப்படையில் மட்டும்தான். இதில் பெரும்பாலான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறாமலேயே பணி ஓய்வு பெற்றுவிடுவர். முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் இடையேயான ஊதிய விகிதம் 3:2 என்ற அளவில் அடிப்படை சம்பளத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் படி 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையில் முதுநிலை ஆசிரியர்களுக்கான சம்பளம் குறைந்துள்ளது.

இதன்படி பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் முதுநிலை ஆசிரியர்களின் ஊதியத்துக்கு சமமான நிலைக்கு மாறி உள்ளது. 6-வது ஊதியக் குழுவின் படி முதுநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 6500 ஆகவும், பட்டதாரி ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் ரூ. 5500 ஆகவும் இருந்தது. இந்த நிலையில் கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1-ஆம் தேதியிட்ட அரசாணைக்குப் பிறகு இருவருக்கும் இடையேயான அடிப்படை சம்பளத்தில் ரூ. 200 மட்டுமே வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

தற்போது 7-வது ஊதியக் குழு பரிந்துரையின் படி 2009-ஆம் ஜூன் மாதம் 1-ஆம் தேதி பணியில் சேர்ந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியம், பட்டதாரி ஆசிரியர்களின் ஊதியத்தை விட குறைவாக உள்ளது.

எனவே, 2009-ஆம் ஆண்டு ஜூன் 1-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும். சரியான ஊதியத்தை நிர்ணயம் செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி கே.கே.சசிதரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் ஆஜரானார். அரசு தரப்பில் அரசு கூடுதல் வழக்குரைஞர் பி.சஞ்சய்காந்தி ஆஜரானார்.

மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.