தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்க கல்விச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகத்தில் ஐந்தாம் வகுப்பு வரை கன்னடத்தைப் பயிற்று மொழியாக்குவதற்காக கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான மசோதா கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்வதற்கான கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது.
ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில்தான் நிலவுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை தமிழைப் பயிற்று மொழியாக்க வேண்டும்.
தமிழை கட்டாயப் பாடமாக்க வேண்டும் என்று கடந்த 25 ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, அதன்பின் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டது.
தமிழைக் கட்டாயப் பாடமாக்குவதற்காக மட்டும் அரசாணை பிறப்பித்த அரசு, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்றுமொழி என்ற கோரிக்கையைக் கண்டுகொள்ளவில்லை.
இதன் பிறகாவது தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தை உணர்ந்து, கர்நாடகத்தை பின்பற்றி தமிழகத்தில் தாய்மொழி வழிக்கல்வி முறையைக் கொண்டுவர கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த முயற்சிக்கு ஏதேனும் முட்டுக்கட்டை போடப்படுமானால், ஒத்த கருத்துடைய முதல்வர்களை ஒன்று திரட்டி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து, தாய்மொழி வழிக்கல்வியை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.