ஆங்கில பாடத்தை புதிய முறையில் பயிற்றுவிப்பதற்காக, ஒவ்வொரு
பள்ளிக்கும், ஒரு குறுந்தகடு வீதம் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், டிவிடி பிளேயர் மற்றும் கணினி உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால், குறுந்தகட்டை பயன்படுத்த முடியாமல், அவை வீணாகி வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆங்கில வழிக்கற்றலை புதிய முறையில் பயிற்றுவிக்க, தொடக்க கல்வி இயக்குனரகம் முடிவு செய்தது. அதன்படி, ஆங்கில சொற்களை எவ்வாறு உபயோகிப்பது மற்றும் உச்சரிப்பது என்பது தொடர்பான வழிமுறை அடங்கிய, 43 பாடங்களை கொண்ட இரண்டு குறுந்தகடுகள், கடந்த ஆண்டு தயார் செய்யப்பட்டன. இந்த குறுந்தகடு, கடந்த ஆண்டு டிச., 2ம் தேதி கல்வி துறை அமைச்சரால் வெளியிடப்பட்டது. வினியோகம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும், 50 குறுந்தகடுகள் வீதம் 1,600 குறுந்தகடுகளும்; 3,200 விளக்க கையேடுகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மூன்று குறுந்தகடுகள் வழங்கப்பட்டன. அவர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு, வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் உதவியுடன், புதிய குறுந்தகடுகளை உற்பத்தி செய்து, அளிக்க வேண்டும். இந்த குறுந்தகடுகளை, ஏற்கனவே தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டிவி மற்றும் டிவிடி பிளேயர் மூலமாகவும்; நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட கணினி உபகரணங்கள் மூலமாகவும் இயக்க உத்தரவிடப்பட்டது. இந்த பணிகளை முடிக்க, நேற்று கடைசி தேதியாக தொடக்க கல்வி துறை உத்தரவிட்டிருந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களிலும், 1,012 தொடக்கப் பள்ளிகளும்; 362 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு, குறுந்தகடு மற்றும் விளக்க கையேடுகள் முழுமையாக வழங்கப்பட்டு விட்டன. ஆனால், இந்த குறுந்தகட்டை பயன்படுத்த வழங்கப்பட்டுள்ள டிவிடி பிளேயரும், கணினி உபகரணங்களும் பல பள்ளிகளில் பழுதடைந்துள்ளன. இதனால், குறுந்தகட்டை பயன்படுத்தி, மாணவ, மாணவியருக்கு விளக்க முடியாத சூழல், ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. பாராமரிப்பு நிதி பள்ளிக் கல்வி துறை சார்பில் பல புதிய திட்டங்களும், செயல்பாடுகளும் கொண்டு வரப்பட்டாலும், அவற்றை பயன்படுத்துவதற்கான ஆய்வகங்களும், உபகரணங்களும், இட வசதியும் அனைத்து பள்ளிகளிலும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை. இதுகுறித்து, உதவி தொடக்க கல்வி அலுவலர் ஒருவர் கூறுகையில், "பள்ளி பராமரிப்பு நிதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. டிவிடி பிளேயர் அல்லது கணினி உபகரணம் பழுதாகி இருந்தால், அந்த நிதியில் இருந்து பழுது நீக்கிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். அவ்வாறு பழுது பார்க்காத பள்ளிகள் குறித்து, ஆய்வு நடத்தப்படும்" என்றார். பள்ளி பராமரிப்பு நிதி, ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. டிவிடி பிளேயர் அல்லது கணினி உபகரணம் பழுதாகி இருந்தால், அந்த நிதியில் இருந்து பழுது நீக்கிக்கொள்ள அறிவுறுத்தியுள்ளோம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.