WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 5, 2015

கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறை; மதிப்பெண் இழக்கும் மாணவர்கள்.

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் அரசு மேல்நிலை பள்ளிகளில், கணினி ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவ, மாணவியர், செயல்முறை பாடத்தின் மூலம் கிடைக்கும், மதிப்பெண்களை இழக்கும் நிலை, தொடர்கிறது.

சென்னை மற்றும் புறநகரின் திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில், 93 அரசு மேல்நிலை பள்ளிகள் உள்ளன. அவற்றில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில், 6,000 க்கும் அதிகமான மாணவ, மாணவியர், கணினி அறிவியல் பாடப்பிரிவில் படிக்கின்றனர்.

பற்றாக்குறையின் விளைவு

அடுத்த மாதம், 5ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான பொது தேர்வுகள் துவங்க உள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள, பல அரசு பள்ளிகளில், கணினி வகுப்பிற்கான செயல்முறை பாடங்கள் நடத்தப்படுவதில்லை என, புகார் எழுந்துள்ளது. அதற்கு, பல பள்ளிகளில், கணினி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது தான் காரணம்.

ஆனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சேர்க்கையின் போது, அவர்களிடம் கணினி பாட வகுப்பு கட்டணமாக, தலா, 200 ரூபாய் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம், 400 ரூபாய் வசூலிக்கப்பட்டு, அரசிடம் செலுத்தப்படுகிறது.

ஒரு சில பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், அவர்களும், பிற பாடங்களுக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறை பிரச்னையால், அந்த பாடங்களுக்கான வகுப்புகளை எடுப்பதால், கணினி அறிவியல் வகுப்புகள், பெயரளவில் கழிந்து விடுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் செயல்முறை வகுப்புகளையும், அவற்றின் மூலம் கிடைக்கும் மதிப்பெண்களையும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

செயல்முறை தேர்வுக்கு 150, எழுத்து தேர்வுக்கு 50 என, மொத்தம் 200 மதிப்பெண்கள், கணினி அறிவியல் பாடத்தேர்வுக்கு கிடைக்கும் என்பது, குறிப்பிடத்தக்கது.

நியமிப்பரா?

இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், 5,000 ரூபாய் சம்பளத்தில், தற்காலிக கணினி ஆசிரியர்கள் இருந்தனர். அவர்களில், தகுதி தேர்வெழுதிய பலர் தேர்ச்சி பெறாததால், மீண்டும் அந்த பணியிடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருப்பது போல், ஒப்பந்த அடிப்படையில் தகுதியான ஆசிரியர்களையும் நியமிக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதது தான். அடுத்த ஆண்டாவது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் தான் மாணவர்களுக்கு உதவ முடியும், என்றார்.

‘எங்களுக்கு, எப்போதாவது தான் கணினி அறிவியல் வகுப்புகள் நடக்கும். குறிப்பாக செயல்முறை வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுவதில்லை. அந்த நேரத்தில், நாங்கள் மற்ற பாடங்களை படிப்போம். கணிதம் போன்ற ஒரு சில முக்கிய பாடங்களுக்கே கூட, எங்கள் பள்ளியில், ஆசிரியர்கள் இல்லை‘ என்கின்றனர் ஆவடி அரசு பள்ளி மாணவர்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.