தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து, வேலைக்காக காத்திருப்பதாகவும், இவர்களுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி 3 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சென்னையில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில செயலாளர் நம்புராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் பிற மாநிலங்களில் 40 சதவீதம் உடலில் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் உடலில் 60 சதவீதம் ஊனமிருந்தால் மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். உடலில் 40 சதவீதம் ஊனமுள்ள அனைவருக்குமே தமிழக அரசு மாதம் யி3 ஆயிரம் வழங்க வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து அரசு பணிக்காக காத்திருக்கின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அரசு நிறைவேற்ற வேண்டும்.
இதை கண்காணிக்க தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில், அமைச்சர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டு, இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்துகின்றனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். 2013ல் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், அரசு சார்பில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லும் வகையிலும், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், 2013க்கு பின்பு கட்டப்பட்ட கட்டிடங்களில் இதுவரை ஒன்றில் கூட மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றவகையில் எந்த வசதிகளும் செய்யப்பட வில்லை. உதாரணமாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகமே இதற்கு சான்று. இக்கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 24ம் தேதி சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.