ஒன்பதாம் வகுப்பு தேர்வெழுதியுள்ள மாணவர்களுக்கு, கோடை கால சிறப்பு வகுப்பு நடத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில், ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளிகளும், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என பள்ளி கல்வித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில் இருந்தே, மாணவர் தேர்ச்சிக்காக பலகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பொதுத்தேர்வுக்கு பின் கோடை கால விடுமுறையிலும், பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த, பள்ளி கல்வித்துறை வலியுறுத்தியது.
இம்மாத இரண்டாவது வாரத்தில் இருந்து, அரசு பள்ளிகளில், பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு பிளஸ் 2 சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது; பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் சென்று விட்டதால், பல பள்ளிகளில் பிளஸ் 2 சிறப்பு வகுப்பு இன்னும் துவங்கவில்லை.
ஓரிரு நாட்களில், துவங்கி விடுவோம் என அப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மழுப்பி வருகின்றனர். பிளஸ் 2 சிறப்பு வகுப்புக்கு வரும் மாணவர் எண்ணிக்கையும் மிக குறைவாகவே உள்ளது; உடல்நல பாதிப்பு உள்ளிட்ட ஏதேனும் சில காரணங்களை கூறி, பல மாணவர்கள் புறக்கணிக்கின்றனர்.
இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். வெயில் சுட்டெரிப்பதால் மாணவ, மாணவியர் மட்டுமின்றி, பள்ளிக்கு வர ஆசிரியர்களும் அருதிப்தி அடைகின்றனர்.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் நிறைந்திருப்பதால் கோடை விடுமுறையில், பணிக்கு செல்லும் மாணவ, மாணவியர் அதிகம்; பெற்றோர் அல்லது உறவினருடன் பணிக்கு சென்று, பணம் சம்பாதிக்கின்றனர். தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு செல்வர்.
இச்சூழலில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை கால சிறப்பு வகுப்பு நடத்தினால், போதிய வருகை இருக்காது; சொற்ப மாணவர்களுக்கே பாடம் நடத்த நேரிடும். பள்ளி திறந்தவுடன், பாடங்களை மீண்டும் முதலில் இருந்தே நடத்த வேண்டிய சூழல் ஏற்படும், என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.