தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப வினியோகம் நிறைவடைந்தது. இதுவரை 35 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மருத்துவ கல்லூரிகள்
தமிழ்நாட்டில் 19 அரசு மருத்துவகல்லூரிகள் உள்ளன. அரசு மருத்துவகல்லூரிகளில் 2,555 இடங்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்காக உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 383 இடங்கள் போக, மீதம் உள்ள 2 ஆயிரத்து 172 இடங்கள் தமிழகத்தின் ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இ.எஸ்.ஐ.மருத்துவகல்லூரி இடங்களும் அரசு ஒதுக்கீட்டுக்கு வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவகல்லூரியில் 100 இடங்கள் உள்ளன.
சுயநிதி மருத்துவகல்லூரிகள் 13 உள்ளன. அவற்றில் 8 மருத்துவகல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க அனுமதி உள்ளது. 18 சுயநிதி பல்மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு கொடுக்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
விண்ணப்ப வினியோகம்
இந்தநிலையில் 2015-2016-ம் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் கொடுக்கும் பணி கடந்த 11-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. விண்ணப்பம் வழங்கும் பணியினை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், மருத்துவகல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் கடந்த 18 நாட்களாக நடந்து வந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கும் பணி நேற்றுடன் முடிவடைந்தது.
கடைசி நாளான நேற்று விண்ணப்பங்கள் விற்பனை எதிர்பார்த்தபடி அதிகமாகவே இருந்தது. இதுவரை தமிழகம் முழுவதும் 35 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு மாணவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு
இதுகுறித்து மருத்துவகல்லூரி இயக்குனர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:-
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணி முடிவடைந்துள்ளது. இதுவரை (நேற்று மாலை 6 மணி வரை) 35 ஆயிரத்து 667 விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட 24 ஆயிரத்து 115 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு 29-ந்தேதி (இன்று) கடைசி நாள்.
பிளஸ்-2 விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவு வெளியானபிறகுதான் தரவரிசை பட்டியல் வெளியிடும் தேதியையும், கலந்தாய்வு தொடங்கும் தேதியையும் முடிவு செய்ய முடியும். இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.