தேர்வு மையத்தில் இருந்து திருத்தும் மையத்துக்கு விடைத்தாள்களை
பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திருச்சி மாவட்டம், முசிறி அரசு மேல்நிலைப்பள்ளியில் 2010 ஆம் ஆண்டு இயற்பியல் தேர்வு எழுதிய 262 மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களுக்கு கொண்டு செல்லும் வழியில் மாயமானது. பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 262 பேருக்கும் இழப்பீடு அளிக்க உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தலைவர் முருகேசன் மனு தாக்கல் செய்தார். அதில், முசிறியில் இருந்து தபாலில் விடைத்தாள்கள் கோவைக்கு அனுப்பிய போது மாயமாகியுள்ளன. பொதுவாக விடைத்தாள்களை பாதுகாப்பற்ற முறையில் பேருந்துகளில் அனுப்புகின்றனர் என குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், விடைத்தாள்கள் காணாமல் போனதற்கு கல்வித்துறை காரணம் அல்ல. சம்பந்தப்பட்ட ஊழியர் மீது தபால் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முசிறியில் இருந்து விடைத்தாள்களை அனுப்பிய முறையைப் பார்க்கும் போது கவனக் குறைவாகவும் பாதுகாப்பற்ற முறையிலும் அனுப்பியது தெரிகிறது. விடைத்தாள்கள் காணாமல் போனால் மாணவர்களும் பெற்றோர்களும் கடுமையாகப் பாதிக்கப்படுவர். எனவே இது போன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுக்கும் விதமாக விடைத்தாள்களை திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு பாதுகாப்பான புதிய வழிமுறையை அரசு உருவாக்கவேண்டும். இழப்பீடு கோருவதற்கு கீழமை நீதிமன்றத்தை மனுதாரர் அணுகவேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.