WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, January 18, 2016

சி.ஏ., தேர்வு; சென்னை மாணவர் முதலிடம்!

கணக்கு தணிக்கை துறையின் ஆடிட்டர் பதவிக்கான, சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் என்ற, சி.ஏ., படிப்பின் இறுதித்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பல ஆண்டுகளுக்கு பின், சென்னை மாணவர், நாட்டிலேயே முதலிடம் பெற்றுள்ளார். பிளஸ் 2வில், கணிதப் பதிவியல் பிரிவில் படித்தவர்களும், பி.காம்., கார்பரேட் செக்ரட்ரிஷிப் முடித்தவர்களும், சி.ஏ., தேர்வை எழுதுகின்றனர். இதற்கு முதற்கட்டமாக, சி.பி.டி., என்ற பொதுத்திறன் தேர்வு நடக்கும். அதில் வெற்றி பெற்ற பின், ஐ.பி.சி.சி., என்ற இறுதித் தேர்வில் பங்கேற்று ஆடிட்டர் ஆகலாம். கடந்த, 2015 நவம்பரில் நடந்த, சி.ஏ., இறுதித் தேர்வு முடிவுகளை, இந்திய சார்ட்டர்டு அக்கவுன்டன்ட் நிறுவனம், நேற்று பிற்பகலில் வெளியிட்டது. இதில், தேசிய அளவிலான முதலிடத்தை, சென்னை மாணவர் ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ பெற்றுள்ளார். இவர், 800க்கு, 595 மதிப்பெண் பெற்று, 74.38 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின், சென்னையைச் சேர்ந்த மாணவர், தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திருப்பதி மற்றும் கோல்கட்டாவைச் சேர்ந்த மாணவர்கள், 572 மற்றும், 566 மதிப்பெண்களுடன் இரண்டாவது மற்றும் மூன்றாமிடம் பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு போன்றதே! சி.ஏ., இறுதித் தேர்வில், தேசிய அளவில் முதலிடம் பெற்ற ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ, சென்னை, முகப்பேரில் வசிக்கிறார். இவரது தந்தை ராஜா; ஆடிட்டர்; தாய் தேவி. 2010ல், எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பிளஸ் 2 முடித்தவர் ஜேம்ஸ். ஜேம்ஸ் அளித்த பேட்டி:தேர்வில் வெற்றி பெறுவேன் என நினைத்தேன். ஆனால், முதலிடம் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. என் தந்தையின் ஆலோசனை, பயிற்சி மையங்களின் தொடர் பயிற்சி மற்றும் அறிவுரைகளை ஏற்று, தேர்வுக்காக கடினமாக உழைத்தேன். சி.ஏ., தேர்வில் வெற்றி பெறுவதற்கு பெரிய அளவில், ரிஸ்க் எடுக்க தேவையில்லை. அக்கவுன்டன்சியில் ஆர்வம் வேண்டும்; தேர்வுக்கான பயிற்சி தேவை. பள்ளி பருவத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு எப்படி தயாராகிறோமோ அதே போல படித்தால் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். நாடு முழுவதும், 42 ஆயிரத்து, 469 பேர், இந்தத் தேர்வை எழுதினர்; அவர்களில், 2,440 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.ஏ., இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,440 பேரில், 520 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.