நள்ளிரவில் மின்சாரம் திடீரென கட் ஆகி விட, வெப்பத்தையும் கொசுக்கடியையும் தாங்க முடியாமல் குழந்தைகள் அழுததை மறக்க முடியுமா? அறிவிக்கப்பட்ட, அறிவிக்கப்படாத மின்வெட்டால் தொழில் ஸ்தம்பித்து நின்றதைதான் மறக்க முடியுமா? ஒரு ஆட்சியையே வீட்டுக்கு அனுப்ப, காரணமான அந்த வெப்ப நாட்கள் இதோ, மீண்டும் வந்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது, அவ்வப்போது துவங்கியுள்ள மின்வெட்டு. கடந்த ஒரு வார காலமாக, பகல் மற்றும் இரவு நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, அவ்வப்போது எட்டிப்பார்த்து அலாரம் அடித்து செல்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போதெல்லாம், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டை, அமல்படுத்துவது ஆட்சியாளர்களுக்கு வழக்கமாகி விட்டது. இந்தாண்டு கோடையின் தாக்கம் முன்னதாகவே ஆரம்பமாகி விட்ட நிலையிலும், பெரிய அளவில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது.ஆனால், கடந்த சில நாட்களாக கொஞ்சம், கொஞ்சமாக மின்சாரம் திடீரென காணாமல் போய் விடுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நேரத்தில், மாணவர்கள்தான் இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பிளஸ்2 தேர்வுகள் நடந்து வரும் சூழலில், பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நேற்று துவங்கியது. மின்வெட்டு அதிக அளவில் இல்லாததால், பெரும்பாலான தேர்வு மையங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்பாடு செய்யவில்லை. தேர்வு எழுதும் போது, மின்தடை ஏற்படுவதால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இரவு நேரங்களில் தேர்வுக்கு தயார்படுத்திக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், இந்தாண்டு ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் கூறவில்லை. கடந்த இரண்டு நாட்களாக நடந்த தேர்வுகளின் போது, மூன்று முறைக்கு மேல் பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்றார். மின்பகிர்மான வட்ட கோவை மெட்ரோ கண்காணிப்பு பொறியாளர் கோபி கூறுகையில், அறிவிக்கப்படாத மின்வெட்டு கோவையில் இல்லை. ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகள் கூட, மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி அவசர சமயங்கள் தவிர, எதற்காகவும் மின்தடை செய்வதில்லை, என்றார். கடந்த தி.மு.க., ஆட்சியை வீட்டுககு அனுப்ப, இதே மின்வெட்டுதான் காரணமாக இருந்தது என்பதை, ஆளுங்கட்சியினர் உணர்ந்தால் சரி.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.