பிளஸ் 2 தேர்வில், தனித்தேர்வர்களின் கீழாடையை கழற்றி, உள்ளாடையிலும் சோதனையிட்டு, ஆசிரியர்களும், அதிகாரிகளும் அவமானப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதனால், தனித்தேர்வர்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில், 42 ஆயிரம்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 48 ஆயிரம் தனித்தேர்வர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். பள்ளி தேர்வு மையங்களில், தனித்தேர்வர்களுக்கு தேர்வு அறைகள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், பள்ளி மாணவர்களுடன் சேர்ந்தும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, உடற்கல்வி, தொழிற்கல்வி, முதுகலை, பட்டதாரி மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள், 10 ஆயிரம் பேர், 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படையில் இடம் பெற்றுள்ளனர்.இந்த ரோந்து படையினர் திடீரென, தேர்வு அறைக்குள் நுழைந்து, மாணவர்களை மிரட்டும் விதமாக அவர்களின் வினாத்தாள், விடைத்தாளை பிடுங்குவதும், அவர்களை குற்றவாளிகள் போல் பார்த்து, சோதிப்பதும், மாணவர்களை அச்சமடைய செய்துள்ளது. இந்த பண்பற்ற சோதனையால், தேர்வு எழுதும் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்பட்டு, மீண்டும் அவர்கள் தேர்வைதொடர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். தனித்தேர்வர்களின் நிலைமை இதை விட மோசம்
தனித்தேர்வர்களை குற்றவாளிகளாவே நினைத்து, அவர்களை, ஆசிரியர்கள் நடத்தும் விதம் பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், தனித்தேர்வர்களை, ஆடையை கழற்ற சொல்லி, அவமானப்படுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ஊத்துக்கோட்டையில் உள்ள அரசு பெண்கள் பள்ளி, ஆர்.கே. பேட்டை வேதாந்திரி பள்ளி, பூந்தமல்லி அரசு பள்ளியில், பறக்கும் படையினரும், நிலையான படையினரும், தனித்தேர்வர்களை கீழாடையை கழற்ற சொல்லியும், உள்ளாடைகளை சுட்டி காட்டியும், 'பிட்' உள்ளதா என சோதனை நடத்தியுள்ளனர்.இதில், ஆண் தனித்தேர்வர் மட்டுமின்றி, பெண் தனித்தேர்வரையும் தேர்வு அறையிலேயேமற்ற பெண்கள் மத்தியில், கீழாடையை கழற்ற சொல்லி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனை, திருவள்ளூர் மாவட்ட பொறுப்பில் உள்ள இணை இயக்குனர் உஷாராணியின் உத்தரவின் படியே நடப்பதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இந்த சோதனையால் அதிர்ச்சி அடைந்து, தேர்வு அறையின் பெண் கண்காணிப்பாளர்கள்,
ஆடை சோதனையின் போது, அறையில் இருந்து ஒதுங்கி வெளியே நின்றுள்ளனர். 'பிட்' மாட்டாத நிலையிலும், தேர்வர்களை மிக மோசமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்துள்ளனர்.
இது குறித்து, தனித்தேர்வர்கள் சிலர் கூறும்போது,'மாணவ பருவத்தில், குடும்ப சூழலால் பள்ளிக்கு சென்று படிக்க முடியாத நிலையில், வேலை செய்து சம்பாதிக்க துவங்கியதும், தனியாக படித்து தேர்வு எழுதுகிறோம். மற்றவர்களை போல், நாமும் படித்து முன்னேற வேண்டும் என்ற நோக்கில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுதுகிறோம். ஆனால், எங்களை ஏதோ குற்றவாளிகளை போல பாவித்து, கிண்டல் செய்வதும், அவமானப்படுத்துவதும் வேதனை அளிக்கிறது' என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.