WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, April 6, 2016

தனியார் பள்ளிகளை பிழிந்தெடுக்கும் வசூல் வேட்டை

கடந்த, ஐந்து ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் கணக்கிலடங்காத பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. முதலில் மூன்று ஆண்டுகள் அளித்த
அங்கீகாரத்தை, ஓராண்டுக்கு ஒருமுறை என மாற்றி விட்டனர். அதிலும், மாணவர் சேர்க்கை முடித்து, அந்த கல்வி ஆண்டே முடிந்த பின்தான், முடிந்த ஆண்டிற்கான அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கும் பெயரளவில் பல காரணங்களை சொல்லி, அதிகாரிகள் வசூல் செய்கின்றனர். நிலப்பற்றாக்குறை உள்ள பள்ளிகளுக்கு, அங்கீகாரம் தருவோம் என்று கூறி, அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் பேசி, தனியார் பள்ளிகளிடம் வசூல் செய்தனர். தற்போது நீதிமன்ற வழக்கை காட்டி, அங்கீகாரத்தை நிறுத்தி விட்டனர். மே, 31ம் தேதியுடன், 746 பள்ளிகளின் அங்கீகாரம் முடிகிறது; அதை பற்றி அரசுக்கு எந்த கவலையும் இல்லை. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மோசமான செயல்பாடுகளால், பெரும்பாலான தனியார் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., திட்டத்துக்கு மாறி வருகின்றன. அதற்கும் மாநில அரசிடம் என்.ஓ.சி., வாங்க, அரசு உயரதிகாரிகளுக்கு பல லட்சம் செலவு செய்ய வேண்டியுள்ளது.பள்ளிகளுக்கான கட்டண கமிட்டி என்று நிர்ணயித்தனர். இந்த கமிட்டிக்கு மூன்று மாதமாக நீதிபதியே இல்லை. கமிட்டி நிர்ணயிக்கும் கட்டணம் முறையாக இல்லை. எனவே அதை விட அதிக கட்டணம் பல பள்ளிகளில் வாங்கப்படுகிறது.தனியார் பள்ளிகளுக்கான சமச்சீர் புத்தக கட்டணம், 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, மாணவர்களுக்கு 5 சதவீத புத்தக கட்டண சலுகை உண்டு. இந்த சலுகையை பள்ளிக்கு தராமல், அதிகாரிகளே எடுத்து கொள்கின்றனர். கடந்த கல்வி ஆண்டில், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். இந்த தொகையை தருவதாக அரசு கூறிவிட்டு, 300 பள்ளிகளுக்கு, 20 கோடி ரூபாய் கட்டணம் தர மறுத்து விட்டது. இதற்கு பல காரணங்களை கூறுகின்றனர். நடப்பாண்டுக்கு, 150 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், மத்திய அரசிலிருந்து, 10.57 லட்சம் ரூபாய்தான் வந்துள்ளது என்கின்றனர். தமிழகத்தில், 18 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. எனவே, அவற்றை நிர்வகிக்க தனி இயக்குனரகம் ஏற்படுத்தினால் தான், இந்த பிரச்னைகளை தீர்க்க முடியும்.தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என தடை விதித்த பள்ளிக்கல்வித்துறை, அரசு பள்ளிகளிலேயே மாலைநேர வகுப்பு, சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக ஆங்கில பிரிவு துவங்கினர். ஆனால், அதற்கான திறமை மிக்க ஆசிரியர்களை நியமிக்கவில்லை. மற்ற மாநிலங்களில் மும்மொழி கல்வி உள்ளது. ஆனால், தமிழகத்தில் அப்படி இல்லை.தனியார் பள்ளிகள் முறையான அங்கீகாரம் பெற வேண்டுமென்றால், பல வித சான்றுகள் வாங்க நிர்பந்தப்படுத்துகின்றனர். இந்த ஒவ்வொரு சான்றும் ஒவ்வொரு துறையில் பெற வேண்டியுள்ளது.அதனால், இந்த சான்றுகளின் பெயரில், வருவாய்த்துறை, நில அளவைத்துறை, பதிவுத்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத் துறை, உள்ளாட்சி, போலீஸ், மின் துறை, குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று துறை என, ஒவ்வொரு துறைக்கும், அனைத்து விதிகளையும் பின்பற்றினாலும் தலா, 50 ஆயிரம் வரை செலவிட வேண்டியுள்ளது.இதுதவிர, தனியார் பள்ளிகளில், 25 ஆயிரம் வேன் மற்றும் பஸ்கள் உள்ளன. இவற்றை ஆண்டுக்கு நான்கு முறை எப்.சி., காட்டுவதற்கு, ஒவ்வொரு முறையும், தலா 10 ஆயிரம் ரூபாய் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, 'கவனிக்க' வேண்டியுள்ளது. இப்படி, தனியார் பள்ளிகளிடம் வசூலுக்கு மேல் வசூல் செய்து, பள்ளியை நடத்த முடியாத அளவுக்கு அதிகாரிகள் அடக்குமுறை செய்கின்றனர். இறுதியில் மாணவர்களும், பெற்றோர்களும், பள்ளி நடத்துவோரும் தான், இந்த அனைத்து வசூலையும் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தனியார் பள்ளி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களின், ஒரு கோடி ஓட்டுகளும், இந்த வசூலுக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்களுக்கே, வரும் தேர்தலில் கிடைக்கும். கே.ஆர்.நந்தகுமார், மாநில பொது செயலர், தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்கம்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.