அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 'இந்த இடமாற்றத்தில் தில்லுமுல்லு இருக்க கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு பள்ளிகள்
மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றரை கோடி மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மட்டும், 4.5 லட்சம் ஆசிரியர் பணிபுரிகின்றனர். ஆகஸ்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்பத்தின்படி, இடமாறுதல் வழங்கப்படும்; இதற்காக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 'இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடத்தும் முன், பள்ளிகளில் ஆகஸ்ட் 1ம் தேதிப்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, இந்த விகிதத்தில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறையான பள்ளிகளுக்கு மாற்றுவர். இந்த கணக்கீட்டில், ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தான் நடக்கின்றன. ஆனால், பணி நிரவலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, கல்வித்துறை அக்கறை காட்டுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில், மீண்டும் பணிநிரவல் நடக்கிறது. ஓராண்டில் அதிக ஆசிரியர்களின் இடங்கள் சரிசெய்யப்பட்டால், மீண்டும் எப்படி அதிக ஆசிரியர்கள் இருக்க முடியும் என்பது கல்வித்துறைக்கே பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. ஆண்டுதோறும் அதிக ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறை வதாகவே தெரிகிறது. இதையும் கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு மட்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2,000 ஆசிரியர்; தொடக்க பள்ளிகளில், 3,000 ஆசிரியர் கூடுதலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தில்லுமுல்லு :
அதேநேரம், பணி நிரவலில் பல தில்லுமுல்லுகளும் நடப்பதாக தெரிய வந்துள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்கள் என்றால், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், விகிதப்படி அதிக ஆசிரியர்கள் இருந்தாலும், பணிநிரவல் செய்வதில்லை. மேலும், பணி நிரவலில் முக்கிய பணியிடங்களை மறைத்து, சிபாரிசுப்படி, பணிமாறுதல் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. பணி நிரவல் நடவடிக்கையில் காலியாக உள்ள இடங்களை, மாவட்ட வாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பணி நிரவலை மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம் நடத்த வேண்டும். பணி முடிந்த பின், வேண்டப்பட்ட ஆசிரியர்களுக்கு மட்டும் விதிகளை தளர்த்தி இடமாறுதல் வழங்குவதை நிறுத்த வேண்டும். பேட்ரிக் ரைமண்ட், பொதுச்செயலர், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.