WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 16, 2017

ஜாக்டோ - ஜியோவுடன் சமரசம் செய்ய அரசு திட்டம் போராட்ட அறிவிப்புக்கு முன் பேச்சு நடத்த முயற்சி.


ஊதிய உயர்வு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ள, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை சமரசம் செய்ய, தமிழக அரசு அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். வரும் 23ம் தேதி, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் முன், பல்வேறு சலுகை திட்டத்தை
அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை நீக்க, புதிய குழு அமைப்பது குறித்தும், அரசு ஆலோசித்து வருகிறது.ஊதிய உயர்வு மற்றும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில், கடந்த மாதம், தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதிப்படி, ஊதிய உயர்வுக்கான அறிவிப்பை, சமீபத்தில், அரசு வெளியிட்டது. 'ஊதிய உயர்வு, அக்., முதல் அமலாகும்' என, அரசு அறிவித்துள்ளது. ஜனவரியில் முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்ற எதிர் பார்த்திருந்த, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதனால், ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர் மட்டக்குழு, இம்மாதம்,13ம் தேதி,அவசர ஆலோசனை நடத்தியது.இதில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், வழக்கு விசாரணையின்போது, ஊதிய முரண்பாடு குறித்து முறையிடுவது எனவும், அரசு சாதகமான பதில் தராவிட்டால், மீண்டும் போராட்டத்தை துவக்கவும்,முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலரும், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினருமான, தாஸ் கூறியதாவது:மத்திய அரசு பரிந்துரையின் படி, 2016, ஜன., முதல், ஊதிய உயர்வு கணக்கிட வேண்டும். தமிழக அரசு, 21 மாத சம்பள உயர்வுக் கான நிலுவை தொகையை, தர மறுத்துள்ளது. ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்தியதில் உள்ள, ஊதிய முரண்பாடுகளை சரி செய்ய வேண்டும் என, ஆறு ஆண்டுகளாக கோரினோம். அதை செய்யாமல், ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அறிவித்ததால், குளறுபடி அதிகரித்துள்ளது.அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, அடிப்படை ஊழியர்களுக்கு சாதகமாக இல்லை; அதிகாரிகளுக்கே சாதகமாக உள்ளது. எனவே, 20ம் தேதி, மாநிலம் முழுவதும் விளக்க கூட்டம் நடத்த உள்ளோம். ஊதியகுளறுபடிகளை, நீதிமன்றத்திலும் தெரிவிக்க உள்ளோம். தீர்வு காணாவிட்டால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து, முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதனிடையே, அரசுக்கு ஆதரவாக, ஜாக்டோ - ஜியோவில் இருந்து பிரிந்து உருவான, ஜாக்டோ - ஜியோ கிராப் நிர்வாகிகளும், முதல்வர், பழனிசாமியை சந்தித்து, மனு அளித்துள்ளனர். அதில், ஊதிய உயர்வு ஏமாற்றம் அளிக்கிறது என, தெரிவித்துள்ளனர். அனைத்து தரப்பிலும், அதிருப்தி ஏற்பட்டு உள்ளதால், வரும், 23ம் தேதி, இவ்வழக்கு விசாரணைக்கு வரும் முன், ஜாக்டோ - ஜியோவை சமரசம் செய்யும் முயற்சியை, அரசு துவக்கி உள்ளது. உயர்மட்ட குழுவினரை அழைத்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளது.அப்போது, சம்பள நிலுவைக்கு பதிலாக, சலுகை திட்டங் களை அறிவிக்கவும், ஊதிய முரண்பாடுகளை தீர்க்க, புதிய குழு அமைப்பதற்கும் அரசு தரப்பு முன்வந்துள்ளதாக தெரிகிறது. அதேபோல், 'ஸ்டிரைக்' காலத்தில் ஊழியர்கள் எடுத்த விடுமுறையை சரிக்கட்டவும், ஸ்டிரைக்கில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை கைவிடுவது குறித்தும், அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக,தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.