WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 29, 2018

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்- திருப்பூரில் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சியில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி-கண்டன அறிக்கை...

திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட, வரலாற்றைக் காவிமயமாக்கும் முயற்சியைப் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவின் பேரில் அக்டோபர் 22 அன்று அரசு மற்றும் அரசுதவி பெறும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருக்கான பயிற்சி திருப்பூர் மாநகராட்சி ஜெய்வாபாய் மேல்நிலைப் பள்ளியில்நடைபெற்றது. ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் சனி, ஞாயிறு எனத் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பின் பள்ளி திறக்கப்பட்ட அன்று 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாமல் பயிற்சிக்கு வரவழைக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் அனைத்து நடுநிலைப்பள்ளிகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் அன்று பள்ளிக்குச் செல்லவில்லை என்றால் குழந்தைகள் கல்விப் பாதிப்புக்கு ஆளாவார்கள் என்பதைப்பற்றி மாவட்டக் கல்வி நிர்வாகம் கவனத்தில் கொள்ளாமல்இப்பயிற்சியை நடத்தியுள்ளது.

இதிகாச சங்கள சமிதி என்ற அமைப்பின் சார்பில்‘ஆசிரியர்களுக்கான வரலாறு மற்றும் அறிவியல் துறைபயிலரங்கு’ என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எஸ்-வியாஷ யோகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திரு.சுப்ரமணியம் என்பவரும், இதிகாச சங்கள சமிதி என்ற அமைப்பின் தென் மாநிலச் செயலாளர் டி.வி.ரங்கராஜன் என்பவரும் உரையாற்றியுள்ளனர். பண்டைய இந்து இந்தியாவின் வரலாற்றுச் சான்றுகளற்ற பெருமைகள், இதிகாசங்கள், புராணங்கள், நம்பிக்கைகள் அனைத்தும்அறிவியல் பூர்வாமானவை, உண்மையானவை, உயர்வானவை,பசுவின் புனிதம், இந்தியாவை பாரதம் என்பதே சரியானதுஆகியவற்றைக் குறித்து மட்டுமே இப்பயிலரங்கில்பேசியுள்ளனர். குருகுலக் கல்வி முறை இல்லாமல் போனதால் இந்தியக் கல்வி நாசமடைந்துவிட்டது, தற்போதைய பாடத்திட்டம் சரியில்லை என்றும் சாடியுள்ளனர்.

இவைகள் வகுப்பறையில் நடைபெற வேண்டிய கல்விச் செயல்பாடுகளுக்கும் பாடத்திட்டத்திற்கும் தொடர்பில்லாதவைகளாகவும் முரணாகவும் இருந்துள்ளன. இது போன்ற கருத்துகள் ஆசிரியர்களுக்கும்குழந்தைகளுக்கும் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க உதவாது. உண்மையான வரலாற்றுக்கு மாற்றாக மூட நம்பிக்கைகளை வளர்க்கவே துணை செய்யும். கல்விச் சூழலில் மத நல்லிணக்க உறவு வளர்வதையே தடுத்துவிடும்.

நிகழ்ச்சி முழுவதும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ். சாந்தி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இப்பயிற்சி மாநிலப் பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதலோ உத்தரவோ இல்லாமல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. வாட்சப்பில் வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் எதைப் பற்றிய பயிற்சி என்பது கூட குறிப்பிடப்படவில்லை.
 
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் கொள்கைப் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந் நிலையில் எந்த மதம் சார்ந்தநடவடிக்கைகளையும் கல்வியில் திணிக்க கல்வித்துறை அனுமதிக்கக் கூடாது எனவும் மதவாத அமைப்புகளின்பிடியில் தமிழக அரசின் கல்வித்துத்துறைசெயல்படக்கூடாது எனவும் பள்ளிக் கல்விப் பாதுகாப்புஇயக்கம் கோருகிறது.

Dr.S.S.ராஜகோபாலன் - புரவலர்
Dr.V.வசந்தி தேவி - தலைவர்
ஜெ.கிருஷ்ணமூர்த்தி - செயலர்


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.