தேசிய கல்வி கொள்கை 2020 அடிப்படையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026-27 கல்வி ஆண்டில் மும்மொழி கொள்கையை அறிமுகம் செய்யவுள்ளதாக முன்னணி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. முதற்கட்டமாக 6-ம் வகுப்பிற்கு 3 மொழி திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும், அதற்கான 9 மொழிகளுக்கான பாடத்திட்ட புத்தகங்கள் உருவாக்கப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.
மும்மொழி கொள்கை
மத்திய கல்வித்துறையின் தேசிய கல்வி கொள்கை 2020 முதன்மையாக மும்மொழி கொள்கையை குறிப்பிடுகிறது. அதன்படி, ஒரு தாய் மொழி, ஆங்கிலம் அல்லாது வேறு இந்திய மொழியையும் மாணவர்கள் கட்டாயம் கற்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இந்த கொள்கையின் அடிப்படையில் பள்ளிக் கல்வி தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCFSE), சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் 2026-27 கல்வி ஆண்டு முதல் மும்மொழி கொள்கையை அமல்படுத்துகிறது.
ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக கருதப்படும்
மும்மொழி கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் 3 மொழியை கற்க வேண்டும். அதில் ஆங்கிலம் வெளிநாட்டு மொழியாக கருதப்படும். இதர 2 மொழிகள் கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டும். ஒருவேளை பிரெஞ்சு அல்லது ஜெர்மன் ஆகிய மொழிகளை மாணவர்கள் கற்றால் அதுவும் வெளிநாட்டு மொழியாகவே கருதப்படும். அவர்களும் 2 இந்திய மொழியை கற்க வேண்டும் என கூறப்படுகிறது.
6 வகுப்பு முதல் அமல்
முதற்கட்டமாக 6-ம் வகுப்பிற்கு வரும் கல்வி ஆண்டில் இந்த முறை அமல்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், குஜராத்தி, பெங்காலி உள்ளிட்ட 9 மொழிகளுக்கான பாடப்புத்தகங்கள் தயாராகி வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரை 3 மொழியை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2031-ம் ஆண்டு பொதுத்தேர்வில் 3-ம் மொழி
இதன் தொடர்ச்சியாக 10-ம் வகுப்பு வரை 3-ம் மொழி கொண்டு செல்லப்படவுள்ளது. 9 மற்றும் 10-ம் வகுப்பிலும் மாணவர்கள் 3 மொழியை கட்டாயம் பயில வேண்டும் என பாடத்திட்டம் அமைக்கப்பட்டு, 2031-ம் ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மும்மொழி தேர்வையும் எழுத வைக்க NCFSE திட்டமிட்டுள்ளது. தற்போது மாணவர்கள் 2 மொழிகளை எழுதி வரும் நிலையில், 2031-ம் ஆண்டு மூன்று மொழி பாடங்களில் பொதுத்தேர்வு எழுத வேண்டிய நிலை உருவாகும்.
கால அவகாசம் எதற்கு?
முதற்கட்டமாக 6 முதல் 8-ம் வகுப்பு வரை மூன்றாம் மொழி கொண்டுவரப்பட்டு, மாணவர்களின் மொழி சார்ந்த பேச்சு, எழுத்துத் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஒரு இந்திய மொழி தவர்த்து, புதியதாக கற்கும் மூன்றாம் மொழியை மாணவர்கள் கற்ற போதுமான கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10-ம் வகுப்பு முடிக்கும் நிலையில், மாணவர்கள் மூன்று மொழிகளையும் அறிந்திருக்க வேண்டும். சமூக தேவைக்கு ஏற்ப அடிப்படை தொடர்பியல் திறனை கொண்டிருக்க வேண்டும். முதல் 2 மொழிகளில் கல்விக்கான மொழியியல் புலமை கொண்டிருப்பதாகவும், முடிந்தவரை மூன்றாம் மொழியிலும் புலமையை கொண்டிருப்பதாக மாணவர்கள் உருவாகும் வகையில் பாடத்திட்டம் வடிவமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பன்முகதன்மை கொண்ட இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், சமூகம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் அறிந்துகொண்டு உணர மொழிகள் உதவும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் பல்வேறு மொழிகளின் புலமை பெற்று தேசிய அடையாளமாக திகழ உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.