WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, February 10, 2026

மலேசியாவிற்கு 5 நாட்கள் கல்வி சுற்றுலா சென்ற அரசுப் பள்ளி மாணவர்கள் - அசத்தும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை.

 

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் மூலம் முன்னெடுக்கப்படும் சிறப்பு திட்டங்களில் ஒன்றாக கல்வி சுற்றுலா உள்ளது. மாணவர்களுக்கு ஊக்கமளித்து, சர்வதேச வாய்ப்புகளை நேரடியாக அறிந்துகொள்ளும் அனுபவமாக வெளிநாடுகளுக்கு அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு 40 அரசுப் பள்ளி மாணவர்கள் 5 நாட்கள் பயணமாக மலேசியாவிற்கு செல்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு கல்வி சுற்றுலா
அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை வெளிக்கொண்டு வந்து, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமல்ல அவர்களின் தனித்திறமைகளினால் ஊக்குவிக்கப்பட வேண்டும் என நோக்கில் இலக்கிய மன்றம், வினாடி-வினா போட்டிகள், விளையாட்டு போட்டிகள், கலைத்திருவிழாக்கள் போன்றவை அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கிராமப்புற பள்ளியில் படிக்கும் மாணவர்கள் முதல் நகரங்களில் பயிலும் மாணவர்கள் வரை அனைவரும் இப்போட்டிகளில் பங்கேற்று அவர்களின் திறன்களை வெளிப்படுத்துவதைக் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிக் கல்வித்துறை மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அரசுப் பள்ளி கலைத்திருவிழா போட்டிகள் கோலாகலமாக நடத்தப்படுகிறது.

இப்போட்டிகளில் தேர்வாகும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் சென்று அவர்களுக்கு புதுமையான அனுபவத்தைப் பள்ளிக் கல்வித்துறை ஏற்படுத்தி தருகிறது. மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா
அந்த வகையில், 2024-25 கல்வி ஆண்டில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம், வினாடி-வினா, சிறார் திரைப்படம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைத்திருவிழா ஆகியவற்றில் 155 மாணவர்கள் வெற்றிப் பெற்றனர். இவர்களில் முதற்கட்டமாக 40 மாணவர்கள் பிப்ரவரி 9 முதல் 13 வரை 5 நாட்கள் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். இவர்களுடன் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 முதன்மைக் கல்வி அலுவலர்கள் என 44 பேர் மலேசியாவிற்கு புறப்பட்டனர்.


சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து வழியனுப்பி வைத்தார். கடந்த வருடங்களில் அமைச்சரும் மாணவர்களுடன் உடன் சென்ற நிலையில், இந்தாண்டு இடைக்கால பட்ஜெட், புதிய பாடத்திட்டம் ஆகிய பணிகளால் செல்ல இயலவில்லை என்பதைப் பதிவு செய்தார்.

மலேசியாவில் என்னென்னலாம் பார்க்க உள்ளனர்?
தமிழ்நாடு அரசின் மாதிரிப் பள்ளிகளில் படித்து மலேசியாவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயிலும் 17 மாணவர்களை சந்திக்க உள்ளனர். மேலும், பிரபல பல்கலைக்கழகங்களுக்கு சென்று பார்வையிடுதல், அறிவியல் அருங்காட்சியங்கள், நூலகங்கள் ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட உள்ளனர்.

மலேசியா நாட்டின் பன்பாட்டு, கலாச்சாரத்தை தெரிந்துகொள்ளும் விதமாக பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர். மிக முக்கியமாக மலேசியாவில் இயங்கும் தமிழ் சங்களுக்கு சென்று தமிழ் சமூகத்தைச் சேர்ந்த தொழிலதிபவர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் ஆகியவர்களை சந்தித்துப் பேசி கலந்துரையாட உள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் அவர்களின் வாழ்க்கை முறை, பின்புலம் ஆகியவற்றை அறிந்துகொள்ளுவது மட்டுமின்றி, அவர்களின் வெற்றிக்கான அனுபவத்தையும் தெரிந்துகொள்ளவுள்ளனர்.

அனைத்து மாணவர்களுக்கு திறமை உள்ளது
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், அனைத்து மாணவர்களுக்கும் ஒரு திறமை உள்ளது. அதனை ஊக்குவித்து வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கல்வி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவித்தார். கிராமப்புறம், நகரம் என பல்வேறு பகுதியில் இருந்து மாணவர்கள் தேர்வுச் செய்யப்படுகிறார்கள். இவர்கள் சுற்றுலாவை முடித்து, அவர்களின் பள்ளிகளுக்கு சென்று ஒரு தூதுவராக செயல்படுவார்கள். இவர்களை ஊதாரணமாக எடுத்துக்கொண்டு இன்னும் நிறைய மாணவர்கள் அவர்களின் திறனைகளை வளர்த்துக்கொள்ளவார்கள் என பேசினார். தொடர்ந்து, அடுத்த ஆண்டு கனடாவிற்கு அழைத்துச் செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.