அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிப் பாடப் பிரிவுகளில்
இந்த ஆண்டு புதிதாக 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உயர் கல்வி, பள்ளிக் கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் (தளி), அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்கி அரசே ஆங்கில வழிக் கல்வியை ஊக்கப்படுத்தக் கூடாது என்றார்.
அப்போது குறுக்கிட்டு அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது:
தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்வியை எதிர்த்துப் போராடுபவர்களும் அவர்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்க வைப்பதில்லை. ஏழை, எளியவர்கள் மற்றும் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகளும் ஆங்கிலம் கற்க வேண்டும் என்பதற்காகவே அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்தப் பிரிவுகளில் இந்த ஆண்டு 1 லட்சத்து 6 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.
பல பெற்றோர்கள் தங்களது பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்குமாறு கோரி வருகின்றனர்.
மடிக் கணினி:
ராமச்சந்திரன்: அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதிப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுவதில்லை. ஆனால், அவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கும் மடிக் கணினி வழங்க வேண்டும்.
அமைச்சர் கே.சி. வீரமணி: அரசாணையின்படியே மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கப்படுகிறது. சைக்கிளின் விலை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரைதான். ஆனால், மடிக் கணினியின் விலை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை உள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் மடிக் கணினி வழங்குவது என்பது அரசின் கொள்கை முடிவு. மேலும், மக்களவைத் தேர்தல் காரணமாக கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக் கணினி விநியோகம் தடைபட்டது.
இப்போது மடிக் கணினி விநியோகம் நடைபெற்று வருகிறது. இதுவரை 1.35 லட்சம் பிளஸ் 2 மாணவர்களுக்கும், 15 ஆயிரம் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
விரைவில் மீதமுள்ள மாணவர்களுக்கும் மடிக் கணினிகள் வழங்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.