தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு
ஆசிரியர் தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணை ரத்து
மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு
மதுரை, செப்.26-
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கிய அரசாணையை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் கே.கே.ராமகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்கள் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டது. அதன்படி தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.
பாரபட்சமானது
இதன் பின்பு, 2 முறை தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த மாநில அரசுகள் மதிப்பெண் சலுகை வழங்கலாம் என்று தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
2 முறை நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் அனைவரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதற்கு பின்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று கூறுவது பாரபட்சமானது.
தகுதித்தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்குவது, கல்வித் தரத்தில் சமரசம் செய்து கொள்வது போன்றதாகி விடும்.
எனவே, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் விதியை சுட்டிக்காட்டி தகுதித்தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தகுதித்தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெறுபவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
முரண்பாடாக உள்ளது
இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். நேற்று இந்த வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அவர்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உரிமை கோரி அரசுக்கு மனு கொடுத்ததால் அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. யார் உரிமை கோரினார்கள் என்பதை அரசு கூறவில்லை.
ஏற்கனவே 2 முறை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்று கூறி விட்டு அதன்பின்பு தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதும் என்று கூறுவது முரண்பாடாக உள்ளது.
சரியான நடைமுறை அல்ல
ஏற்கனவே நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் மிக குறைவானவர்களே தேர்ச்சி பெற்ற காரணத்தினால் மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. ஆசிரியர் தகுதித்தேர்வு என்பது போட்டித்தேர்வு அல்ல. தகுதித்தேர்வை போட்டித்தேர்வு போன்று எடுத்துக்கொள்வது சரியான நடைமுறை அல்ல. இதுபோன்று சலுகை மதிப்பெண் அளிப்பதன் மூலம் கல்வித்தரம் பாதிக்கும்.
இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முந்தைய நாள் (5.2.2014) தகுதித்தேர்வு சலுகை மதிப்பெண் விவகாரம் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, ஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்ற விஷயத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஐகோர்ட்டு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாணை ரத்து
அந்த உத்தரவு நகலில் நீதிபதி கையெழுத்திட்டு அந்த ‘மை’ காய்வதற்குள் சலுகை மதிப்பெண் வழங்கி மறுநாள்(6.2.2014) அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது, நீதிமன்றத்தை ரப்பர் ஸ்டாம்பு போல கருதுகிற விஷயம் ஆகும்.
பள்ளிகளில் அனைத்து தரப்பினரும் 100-க்கு 35 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்று ஒரே மாதிரியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போன்று தான் தகுதித்தேர்விலும் அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியாக குறைந்தபட்ச மதிப்பெண் நிர்ணயிக்கப்பட வேண்டும். தகுதித்தேர்வில் அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்பது தான் சரியாக இருக்கும்.
எனவே, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதித்தேர்வில் 5 சதவீதம் மதிப்பெண் சலுகை வழங்கி 6.2.2014 அன்று தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எனினும், இந்த அரசாணை அடிப்படையில் ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது. தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களையும் தொந்தரவு செய்யக்கூடாது. அவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கலாம்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.