அருந்ததியருக்கு வழங்கப்பட்டுள்ள
3 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது
ஐகோர்ட்டில், மனு தாக்கல்
சென்னை, நவ.11-
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில், அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கூடாது என்று ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாதிப்பு
சென்னை ஐகோர்ட்டில், வக்கீல் சரவணகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியர்களுக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு கொண்டுவந்தது. இந்த சட்டத்தினால், பெரும்பான்மையானவர்களான தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அருந்ததியர் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த சட்டத்தை செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இந்த சட்டத்தின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
விழிப்புணர்வு இல்லை
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தீஷ் குமார் அக்னிகோத்ரி, கே.கே.சசிதரன் ஆகியோர் மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்பி கடந்த அக்டோபர் 27-ந் தேதி உத்தரவிட்டார்கள்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வலசை ரவிசந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
அருந்ததியர் மக்கள் கட்சியின் தலைவராக உள்ளேன். தாழ்த்தப்பட்ட பிரிவில், அருந்ததியர் மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால், எங்கள் மக்களிடம் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு விவரங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், இடஒதுக்கீட்டின் பலன்களை அனுபவிக்க முடியாத நிலையில் உள்ளனர். இதனால், இந்த சலுகைகள் எல்லாம் பிற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சென்று விடுகிறது.
கொத்தடிமை
இதனால், எங்கள் மக்கள் துப்புரவு தொழிலாளியாகவும், கொத்தடிமை தொழிலாளியாகவும், செருப்பு தைக்கும் தொழிலாளியாகவும் உள்ளனர். இதனால், அரசு பணி நியமனத்திலும், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் 3 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி 2009-ம் ஆண்டு தமிழக அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. அந்த சட்டத்திருத்தத்தை இந்த ஐகோர்ட்டு ரத்து செய்தாலோ, தடை விதித்தாலோ அது எங்கள் சமுதாய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, என்னையும் ஒரு மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.