கடந்த ஜூன் மாதம் கிராம நிர்வாக பணியாளர் பணி நியமன தேர்வு நடைபெற்றது. 7½ லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு முடிவை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள்
தமிழ் நாட்டில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எழுத்துத் தேர்வு நடத்தி அதற்கு உரிய நபர்களை தேர்ந்து எடுத்து வருகிறது.
அதன்படி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரத்து 342 கிராம நிர்வாக பணியாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடந்து பல மாதங்கள் ஆனதால் எப்போது தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் பாலசுப்பிரமணியத்திடம் கேட்டதற்கு டிசம்பர் 15-ந்தேதிக்குள் கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் குரூப்-2 தேர்வு முடிவும் வெளியிடப்படும் என்று கூறினார். அவர் கூறியபடி குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. நேற்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
வெளியீடு
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் 7,63,880 பேர் எழுதியதில் 6,71,506 பேர்களின் மதிப்பெண், தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை. வகுப்பு வாரியான தரவரிசை நிலையும். சிறப்புப்பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை நிலை ஆகியவற்றைத் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்ப தகுதி, இனம், சிறப்புப்பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்த்தல்
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரியவந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை காலியிட நிலை மற்றும் இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
மேற்படி தேர்வில் கலந்து கொண்டு, இப்பதவிக்கான அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இந்த தகவலை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.