இந்திய தேசத்திலிருந்து வறுமையை விரட்டும் முயற்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
102-வது இந்திய அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். வரும் 7-ம் தேதி வரை நடை பெறும் இந்த மாநாட்டில், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், பிரபல அறிவியல் வல்லுநர்கள். உலகப் புகழ் வாய்ந்த கல்வித் துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மும்பை பல்கலைக்கழகம் செய்துள்ளது.
மாநாட்டினை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, "அறிவியல் அறிஞர்களின் பணியை நினைக்கும்போது அவர்களின் மத்தியில் பணிவுடன் பேச தோண்றுகிறது. சர்வதேச அளவில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இணையாக புதுமையான கண்டுபிடிப்புகளை நமது விஞ்ஞானிகள் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.
நம் நாடு மேன்மேலும் வளர்ச்சி பெற, குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அடிப்படை கல்வி பெறுவதற்கான உரிமை இருப்பது போல், இணைய பயன்பாட்டுக்கான உரிமையும் இருப்பது அவசியமாகும்.
வறுமையை ஒழிக்க அறிவியலும் தொழில்நுட்பமும் உதவி அளிக்கின்றன. அதற்கு இரவு பகல் பாராது விஞ்ஞானிகள் தங்களது உழைப்பினை வழங்குகின்றனர். நவீன இந்தியா உருவாக்குவதற்கு அறிவியல் வளர்ச்சி மிகவும் உதவியாக உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சி, வேளாண்மை மற்றும் உயிரியல் துறைகளில் விஞ்ஞானிகளின் பங்களிப்பு அசாதாரணமானது.
அது போலவே எரிபொருள் சுத்திகரிப்பு, விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் சுகாதார துறைகளிலும் புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகப்படுத்த நமது விஞ்ஞானிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
வானிபம் செய்வதில் நாம் தான் முன்னோடிகள். வானிபம் செய்வது எந்த வகையில் நமக்கு சுலபமானதாக இருந்ததோ அதே வகையில் ஆராய்ச்சிகளும் நமக்கு எளிதானதாகவே உள்ளது.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் உழைப்பையும், புதிய கண்டுபிடிப்புகளுக்காக அவர்கள் செலவிடும் நேரத்தையும் மாணவர்கள் மதிக்க வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை தேசத்தின் முன்னுரிமைகளாக கொண்டு செயல்பட வேண்டும். பிற நாடுகளுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்களில் அறிவியல் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கும் முக்கிய இடம் வழங்கப்படுகிறது. அது இனிமேலும் தொடரும்.
உலக நாடுகள் அனைத்தையும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டு எளிதாக ஒன்றிணைக்க இணையம் உதவுகிறது.ஆகையால் நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உரிமை கட்டாயமாக்கப்பட்டது போல இணைய பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்வி உரிமைக்கு நிகரான இணைய பயன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அது தேசத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.
பல்வேறு சூழ்நிலைகளில் உலக நாடுகள் இந்தியாவுக்கான கதவுகளை அடைக்கும் போதெல்லாம், நமது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும்தான் நமது முன்னேற்றத்துக்கான பாதையை வகுத்துக் கொடுத்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது" என்றார்.
தேசத்தின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும் தந்தையே...நிச்சயம் உங்களின் பாதையை என்றென்றும் தொடருவோம்.
ReplyDelete